விருந்து - சித்ரா
இந்த கதையின் ஹீரோ திருவாளத்தான் , இவர் மூளை கொஞ்சம் வித்தியாசமாக வேலை செய்யும் , அதனால் பொதுவாக எல்லோருக்கும் இடைஞ்சல் , அதனால் இடைஞ்சல் செய்பவர்களை சரியான திருவாளத்தான் என்று சொல்வதுண்டு .
இப்போ இந்த கதைக்கு வருவோம் ,இவன் இது போல தில்லு முள்ளு செய்வதால் , பொதுவாக எல்லோரும் இவனை விட்டு விலகியே இருப்பார்கள் .
அந்த நாட்டு ராஜா எல்லோருக்கும் ஒரு விருந்து குடுக்க அழைப்பு விடுத்தார்.
நம்ம ஹீரோவுக்கு மட்டும் அழைப்பு இல்லை , அதனால் அழைக்காத எல்லோருக்கும் ஒரு பாடம் கற்பிக்க திருவாளத்தான் முடிவு செய்தான் .
விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்று உள்ளே போக பார்த்தான் , ஆனால் காவலாளி அனுமதிக்க மறுத்தான் , உடனே அவனிடம் உள்ளே எனக்கு குடுக்கும் வெகுமதியில் பாதி உனக்கு என்று அவனுக்கு ஆசை காட்டி உள்ளே நுழைந்தான் .
அடுத்த கட்டத்தில் இருந்த காவலாளிகும் அதே போல் பாதி குடுப்பதாக சொல்லி வெற்றிகரமாக உள்ளே நுழைந்தான் .
அங்கே விருந்துக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது .
ஒவ்வொரு இலைக்கு கீழும் இரண்டு வாழை நார்களை வைத்தான் . மக்கள் வந்து அமர்ந்தபின் ,அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாற பட்டது .
அந்த நாரை எதற்காக வைத்திருக்கிறார் கள் என்று எல்லோரும் குழம்பினர் , அப்போ அங்கெ நம் ஹீரோ வந்து , பரிமாற பட்டிருக்கும் மெது வடையின் ஓட்டைக்குள் அந்த நாரை கோர்த்து இரண்டு காதுகளிலும் மாட்டி கொண்டு தலையை அசைத்து அசைத்துதான் அந்த வடையை உண்ண வேண்டும் என்பது அரசர் ஆணை என்றான் .
மக்களும் வேறு வழி இல்லாமல் அப்படியே செய்தனர் . விருந்து எப்படி நடக்கிறது என்று பார்க்க வந்த ராஜா இதை கண்டு அதிர்ந்தார் . விசாரித்த போது இது திருவாளத்தான் வேலை என்று தெரிந்தது , உடனே அவனுக்கு நூறு கசையடி குடுக்குமாறு ஆணை இட்டார் .
நம்ம ஹீரோ அதை காவலாளிகள் இருவருக்கும் பகிர்ந்து அளித்து விட்டு மகிழ்ச்சியுடன் சென்றான்
ஆக மெது வடையில் ஓட்டை எதற்கு இருக்கிறது என்ற அரிய உண்மையை இன்று தெரிந்து கொண்டோம் , திருவாளத்தானுக்கு அந்த பேர் வந்த காரணமும் புரிகிறது அல்லவா .
{kunena_discuss:875}