தமிழ் திரைப்படக் கதை சுருக்கம் – சைத்தான்
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 'ஆ' எனும் கதையை தழுவி எடுக்கப் பட்டுள்ள படம் சைத்தான்.
பிரிவு - உளவியல் த்ரில்லர்
உகந்த பார்வையாளர்கள் - பெரியவர்களுக்கு மட்டும்
ஐடி நிறுவன ஊழியரான தினேஷ் (விஜய் ஆன்ட்டனி) தன் அலுவலக பாஸுடன் (Y G மஹேந்திரன்) ஒரு மனநல மருத்துவரை சந்திக்க வருகிறார்.
அங்கிருந்து கதை பிளாஷ்பேக்கில் நகர்கிறது.
தன் வேலையில் சிறந்து விளங்கும் தினேஷ் ஆன்லைன் மேட்ரிமோனியல் சைட்டில் பார்த்து ஐஸ்வர்யா (அருந்ததி நாயர்) எனும் பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறார். அனாதையான ஐஸ்வர்யா, தினேஷிற்கு நல்ல மனைவியாகவும் அவருடையா அம்மாவிற்கு நல்ல மருமகளாகவும் நடந்துக் கொள்கிறார்.
திடீரென ஒரு நாள் தினேஷிற்கு அவருக்குள்ளே இருந்தே ஒரு குரல் ஒலிக்கிறது. நான் சொல்வதை செய் என சொல்லி வற்புறுத்துகிறது. ஒவ்வொரு முறையும் வேறு வழி இல்லாமல் குரல் செய்வதை அப்படியே செய்யும் தினேஷ், தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறார், தன் நண்பனின் மரணத்திற்கு காரணமாகிறார், ஒரு பெண்ணை கொலை செய்யவும் முயற்சிக்கிறார்.
மன உளைச்சளாலும், குற்ற உணர்ச்சியாலும் அவதி படும் தினேஷிற்கு முன் ஜென்ம நினைவு வந்திருப்பதை மன நல மருத்துவர் தெரிந்துக் கொள்கிறார்.
இந்த நிலையில் ‘ஜெயலட்சுமியை கொலை செய்’ என அந்த குரல் கட்டளையிட குழம்பி தவிக்கிறார் தினேஷ். ஆனாலும் அதை பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொள்ள அந்த குரல் ஒலிக்கும் போது நினைவுக்கு வந்த விஷயங்களை வைத்து தஞ்சாவூர் சென்று விபரம் சேகரிக்க முயலுகிறார். அங்கே சேகரிக்கும் தகவல்களாலும், அவருக்கும் வரும் நினைவுகளாலும் அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகிறார்.
கிட்டத்தட்ட அறுபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் அந்த ஊரில் ஷர்மா (விஜய் ஆன்ட்டனி) என்று ஒரு ஆசிரியர் வாழ்திருந்தார். அவருக்கு கோபால் என்ற ஒரு சிறிய தத்து புதல்வனும் இருந்தான். ஷர்மா தன்னிடம் உதவி கேட்டு வந்த ஜெயலக்ஷ்மி (அருந்ததி நாயர்) என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துக் கொள்கிறார். திருமணத்திற்கு பின் ஜெயலட்சுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது. அதே பள்ளியில் பணி புரியும் நடராஜுடன் நெருங்கி பழகுகிறாள் அவள். இந்நிலையில் ஷர்மாவின் சின்ன கவன பிசகால் அவர்களின் பச்சிளங்குழந்தை இறந்து விட, ஜெயலக்ஷ்மி நடராஜுடன் ஓடி போகிறாள்.
ஆனாலும் சிறிது நாளில் மனம் திருந்தி திரும்பி வரும் ஜெயலட்சுமியை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார் ஷர்மா. ஆனால் திட்டமிட்டு ஷர்மாவையும், கோபாலனையும் நடராஜின் உதவியுடன் கொலை செய்து விட்டு தலைமறைவாகிறாள் ஜெயலக்ஷ்மி.
இன்று வரை அந்த கேஸ் நிறைவு பெறாமலே இருக்கிறது!
தினேஷ் – ஷர்மா என மாறி மாறி வரும் நினைவுகளுடன் தவிக்கும் தினேஷிற்கு, ஐஸ்வர்யா தான் ஜெயலக்ஷ்மி என்று தோன்றுகிறது. எனவே அவளையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்.
இந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளும் மர்மமாக இருக்கிறது. தாமஸ் என்ற ஒருவனுடன் ரகசியமாக பேசும் ஐஸ்வர்யா, ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தினேஷை பிரிந்து செல்கிறாள்.
தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வரும் தினேஷ், தன் மனைவியை தேட முயற்சிக்கிறார்.
பின் வரும் நிகழ்ச்சிகளில், ஐஸ்வர்யா ஒரு தவறான மருந்துகளை அப்பாவி மக்களின் மேல் அவர்களுக்கே தெரியாமல் பரிசோதிக்கும் ஒரு பெரிய கூட்டத்தை சேர்ந்தவள் என்பது தெரிகிறது. அவள் கொடுத்த மருந்தினால் தான் தினேஷினுள் குரல் கேட்பதும் மற்ற மாற்றங்களும் நிகழ்ந்தது என்பதும் புரிகிறது. இதை மருத்துவரும் உறுதி செய்கிறார்.
ஆனாலும் ஐஸ்வர்யாவின் மீதிருக்கும் அன்பினால் அவள் இருக்கும் இடத்திற்கு செல்லும் தினேஷ், ஷர்மாவாக மாறி கெட்டவர்களை அழித்து மனைவியை காப்பாற்றுகிறான்.
அதன் பின் தொடர் சிகிச்சையினால் இருவருமே முழுமையாக குணமும் பெறுகிறார்கள்!
த்ரில்லர் ரக படங்கள் பிடிப்பவர்களுக்கு படம் பிடிக்கும். அதிலும் குறிப்பாக படத்தின் முதல் பகுதி கட்டாயம் பிடிக்கும்.