பெண்மை - கவிதை போட்டி - 15 - ராஜகோபாலன்
தென்றலென்றும், தேனிதழென்றும்
மானென்றும், மீனென்றும்
வார்த்தைகளால் ஜாலம் செய்வர்;
ஆனால் வதைபடுவதும் வசைபடுவதும்
பெண்மைக்குத் தானே தெரியும்!
பாலினப் பாகுபாட்டால்
பெண்மை பாடாய்ப் படுவது
படுபவற்கே புரியும்!
ஆண்களின் சுமையைக் குறைக்க
களமிறங்கித் தங்கள் சுமையை
இரட்டிப்பாக்கிய சுமைதாங்கிகள்!
அறிவியல் முன்னேற்றம்
ஆயிரம் வந்தும்
ஆதாரமான இதயத்தின்
இன்றிமையாப் பணியை
இதயமும்
நுரையீரலின் நுண்ணிய பணியை
நுரையிரலுமே செய்துகொண்டு இருக்கிறது.
பெண்மைக்குச் சுதந்திரம் என
வாய்கிழிய வாதிட்டாலும்
பரிபூரண சுதந்திரத்தை
பெண்மை அடைய
பல படிகள் கடக்க வேண்டியது கண்கூடு!
இம்மானுட சமுதாயம்
உயிரோடிருக்க வேண்டுமெனில்
பெண்மையே
நீ காலத்தின் கோலப்பளுவை
தாங்கித்தான் ஆக வேண்டும்;
அதற்கான வலுவுள்ளவளும்
நீதானே பெண்மையே!
உன் பொறுமைக்கும் பெருமைக்கும்
காலம் பதில் சொல்லாவிடினும்
பெண்மையின் மேன்மைதனை
நாங்கள் போற்றுகிறோம்!