கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 41 - நாளும் எப்பொழுதடா???...!!! - மீரா ராம்
அதிகாலை இருட்டு மறைய துவங்க
கண்களை சுருக்கி இதழ் விரித்து எழுந்தேன்
நெஞ்சில் உன் நினைவுகளை கொடிபோல் படரவிட்டு….
தண்ணீரை அள்ளி முகத்தினில் தெளிக்கையில்
உன் ஞாபகத்தை அள்ளிக்கொண்டதை போல் உணர்ந்தேன்…
கைபேசியை எடுத்து உன்னிடம் பேச மனம் விழைய
மணியை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை தூர வைத்தேன்…
குளித்து முடித்து ஈரத் தலையில் துணியைக் கட்டி
வாசல் கதவைத் திறந்து முற்றம் பெருக்கி
தண்ணீர் தெளித்து புள்ளி வைத்திட
என் மனமோ சிக்கிக்கொண்டது உன் நினைவு கோலத்தில்…
காலை ஊன்றி அமர்ந்திருந்த நான் என்னை நானே
திட்டிக்கொண்டு மெல்ல தலையிலும் அடித்துக்கொள்ள,
சட்டென ஒரு எண்ணம்….
விழிகளை சுழற்றி அக்கம் பக்கம் நோட்டம் விட்டேன்
யாரும் பார்த்திட்டார்களோ என…
இல்லை என தெரிந்த பின்னர் நெஞ்சில் கைவைத்து
ஆசுவாசமடைந்தவள், தன்னை அறியாமலே சிரித்திட,
கோலத்தில் பதிந்தது எனது பார்வை…
பார்த்த மாத்திரத்திலேயே, இதழ்களில் புன்னகை விரிய,
தரையினை விட்டு அகலவில்லை என் விழிகள்…
“பேரை மட்டும் தான் ரசிப்பியா?...”
குரல் கேட்டு சட்டென நான் நிமிர,
காலை நிலத்தில் ஊன்றி அமர்ந்திருக்கிறாய் நீ என் எதிரில் கள்ளச்சிரிப்புடன்…
விழிகள் தானாக படர்ந்து விரிய,
அதில் உன்னை வைத்து மூடிக்கொள்ள நினைத்தது என் மனது….
அதை புரிந்து கொண்டவன் போல் என் விழியோடு உன் விழி கலக்க
அங்கே வார்த்தைகள் அர்த்தமற்றதாய் போனது….
சில நொடி கழித்து தன்னுணர்வு நான் பெற,
சட்டென எழுந்து கொள்ள இருந்தவளை தடுத்தாய் நீ உன் வார்த்தைகளால்…
“ஹேய்… என் பேரோட முதல் எழுத்தை கோலமா வரைஞ்சிருக்குற….
வேற யாரும் பார்க்குறதுக்கு முன்னாடி அதை அழிச்சிட்டு கோலத்தை போடு….”
உன் சொற்கள் மனம் எட்டிய வேளை, ஏனோ வலித்த்து எனக்கு…
எப்படி அதனை அழித்திட என…
என் மனம் உனக்கு புரிந்ததோ என்னவோ,
மெல்ல நீ கண் மூடி இமைத்து சிரிக்க,
அதில் லயித்தவளாய் நான் இருக்க,
நீயே அதனை அழித்திட்டு கண் ஜாடை காட்டினாய்
இப்போது கோலமிடு என…
முறைப்புடன் கோலத்தை போட்டுவிட்டு எழுந்து கொண்டவள்,
“யாராவது பார்த்துடப்போறாங்க… கிளம்புங்க….” என கூற,
கைகட்டி நீ நிற்கிறாய் என்னையே பார்த்தவண்ணம்…
என் விழிகள் உன்னிடம் கெஞ்சிட,
பதிலுக்கு நீயோ சரி செல்கிறேன் என சைகை காட்டிவிட்டு
செல்லாமல் அங்கேயே நிற்க,
இன்னும் என்ன என்பது போல் நான் பார்த்திட,
“நான் உன்னை காதலிக்கிறேன்…” என்றாய் நீ மெல்ல சைகையில்…
நாணம் பட்டென எட்டிப்பார்க்க, வாசலை நோக்கி ஓடினேன் நான் வேகமாய்.,..
“ஹேய்…….” என்ற கூக்குரல் என் செவிமடலை வருட,
இதயமோ எகிறித்தான் குதித்தது அத்தருணம்…
வாசல் வரை வந்தவளுக்கு அதற்கு மேல் உள்ளே நுழைய மனம் இல்லாது போக
அங்கேயே நின்றேன் தவிப்புடன்…
“சகி…………….” மெல்ல உன் குரல் எனைத் தீண்ட
உன்னை திரும்பி பார்த்திட்டேன் நான் மௌனமாக…
“உள்ளே போ…” என்பது போல் நீ தலையசைத்து,
விரல்களை ஆட்டி வருகிறேன் என கூற,
சரி என்றும் சொல்ல முடியாமல்,
வேண்டாம் என்றும் சொல்ல முடியாமல்
திணறினேன் நான்…
“லூசு…. சகி….” வாய்விட்டே நீ கூற,
சிரித்தேன் நான்…
என் சிரிப்பு உன்னிடத்திலும் தொற்ற,
என்னைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே நகன்றாய் நீ…
தன்னை அறியாமல் உன்னுடன் செல்ல துடிக்கும்
கால்களை நான் கட்டுப்படுத்திட விழைகிறேனடா கண்ணா…
உன் பாதம் சென்ற வழியில் என் பயணம் நான் தொடர
ஆசையோடு நான் காத்திருக்கிறேனடா…
தாமதிக்காது வந்து என்னை உன்னவளாய்
நீ அழைத்து செல்லும் நாளும் எப்பொழுதடா?...
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…
எப்படி இருக்கு இந்த வாரக் கவிதை….
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்…
பூ மலரும்…
{kunena_discuss:1088}