கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 45 - விரைவில் வந்து சேருமோ...!!! - மீரா ராம்
பல வண்ண விளக்குகள் கண்ணைக் கவரும் வகையில் இருந்திட
எண்ணம் முழுவதும் என் கண்ணனான உன் நினைவில் வந்து நின்றது பளீரென…
கண்கள் காணும் வரையில் மக்கள் கூட்டம் அலைமோத
என் நெஞ்சிலோ உன் எண்ண ஓட்டங்கள் கரைபுரண்டோடியது நில்லாமல்…
ஒவ்வொரு நொடியும் யுகமாய் சென்றிட
ஏனோ அவ்விடத்தில் தனிமையில் உணர்ந்தேன் நான் நீ இல்லாது…
மனதினுள் ஏதோ ஒரு சலிப்பு உண்டாக,
சட்டென திரும்பியவளின் பார்வையில், தூரத்தில் தெரிகிறாய் நீ….
மனதிற்குள் மத்தாப்பு பூவாய் சிதறி ஒளிர,
உன்னை மற்றவர்கள் பார்த்திடாத வகையில் ரசித்திட்டேன் நான்…
அலட்டல் இல்லாத ஆடை அலங்காரம்…
ஒப்பனைகள் செய்திடாத உன் திருமுகம்…
கைகட்டி இயல்பாக நீ நிற்கும் விதம்…
அனைத்தும் அந்த சிலநொடிப்பொழுதில் எனக்குள் பதிந்தது
ஈர நிலத்தில் பதிந்திட்ட பாதங்கள் போல அழுத்தமாகவும் ஆழமாகவும்…
சொந்த பந்தங்கள் படை சூழ இருந்த போதும்,
அவ்வப்போது வேண்டுமென்றே நீ நிற்கும் திசையில்
பாட்டியிடம் ஏதோ காட்டி கூறுவது போல் நான் திரும்பிட
எனக்கே என் செய்கை சிரிப்பை வரவழைத்தது…
நான் அமர்ந்திருக்கும் திசைக்கு நேர் எதிரே நின்று கொண்டு
என்னைக் கொல்லாமல் கொன்றிட்டாயடா நீ….
அழகனடா நீ…
நெற்றியில் வந்து தவழ்ந்து கொண்டிருக்கும் கேசம்…
என்னைப் பார்த்து சிரிக்கும் உதடுகளை மறைத்து
வேலியாய் மேலே பரவியிருந்த அடர்த்தியான மீசை…
கொழு கொழு கன்னங்களைத் தழுவி
நாடி வரை ஒட்டிக்கொண்டிருந்த தாடி…
முழங்கைக்கு சற்று கீழே மடித்துவிட்டுக்கொண்ட சட்டை…
முழங்கால் வரை தூக்கி கட்டியிருந்த காவி வேஷ்டி…..
ஹ்ம்ம்…. எளிமையான அழகில் மனதை கொள்ளை கொள்வது இதுதானாடா?...
அவ்வப்போது என் கண்களிடமிருந்து விலகி
நான் பரிதவிக்கையில் என் கண் முன் வந்து நிற்கும் விதம்….
சொல்ல வார்த்தையே இல்லையடா அத்தருணத்தை…
உன்னைக் காணாது தவித்திடும் நான்
உன்னைக் கண்டுவிட்ட நொடியில் மலர்ந்திடும் என் இதழ்கள்
செம்மை கூடி சிவந்து நிற்கும் என் கன்னங்கள்…
அத்தனைக்கும் மேல் நான் கொள்ளும் நாணம்…
எப்படியடா அதனை நான் உனக்கு விளக்கி கூறிட?...
இந்த நொடியே என்னை உன்னவளாக ஏற்றுக்கொள்ள மாட்டாயா?...
எனும் தவிப்பு என் நாடி நரம்பெங்கும் ஓடி சிதறுவதை
எப்படியடா நான் உனக்கு தெரிவிப்பேன்?...
உன்னில் நான் கரைந்து கொண்டிருக்கையில்
என்னை அழைத்து போகலாம் வா என்றனர் தோழிகள்…
மனமே இல்லாது உன் மீதே என் கண்களையும்
என் எண்ணத்தையும் விட்டு விட்டு
அவர்களுடன் சென்றேன் நான் வெறும் கூடாய்…
என் செல்லக் கண்ணா…
மீண்டும் உன்னை… நான் பார்த்து ரசித்திடும் நாள் வேண்டுமடா…
காத்திருப்பேனடா அதற்காக…
அந்த ஒற்றை நாளுக்காக…
ஆம் அந்த திருவிழா நன்னாளுக்காக….
அது விரைவில் வந்து சேருமா?...!!!
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…
எப்படி இருக்கு இந்த வாரக் கவிதை….
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்…
பூ மலரும்…
{kunena_discuss:1088}