விடிவு காலம் - ஜெனிட்டா
உழச்சதும் போச்சு எங்க பொழப்பும் போச்சு
படிச்சா வாழ்வுன்னு வட்டிக் கடனும் எடுத்து
பட்டப் படிப்பும் படிச்சாச்சு.
அனுபவம் இல்லன்னு வேலையும் இல்ல.
ஆறடி மண்ணுக்கு கூட நாங்க நாதியும் இல்ல.
கடங்காரன் பேச்சு எங்க பெருமூச்சும் எடுக்குது
கடன் தொல்ல தாங்க எங்க வாழ்வ கெடுக்குது.
அடுப்பங்கரையில என் ஆத்தா வேதன
அரிசி உலையில அவ மனசும் வேகுது.
என் தகப்பன் இல்ல ,எனக்கு தாய்தான் உசுரு,
என் உசுருள்ள வரைகும் அவள நல்லா பாக்கணும்.
கொடுத்தாக் கொடுப்பேனு சொல்லுது வேதம்
கஷ்டத்துலக் கொடுப்பேனு நானும் உறுதியும் செஞ்சேன்.
என் ஆத்தா போல அழுரா அடுத்த வீட்டு ஆத்தா..
என்னப்போல அவளுக்கும் படிக்குறான் பையன்
விடிவு காலம் வராதானு அவளும்தான் ஏங்குறா..
அவளுக்கு கொடுக்க சொத்து சொகம் இல்ல.
அவ கண்ணீரு கண்டா தாங்காது புள்ள.
கூலி வேல செஞ்சு என் குடிச வாழ்க்க ஓடுது-என்
கூலியில நானும் கொஞ்சம் உதவியும் செய்றேன்.
“நல்லா இரு ராசா”னு அவளும்தான் சொல்லுறா
மகராசனா வருவேன்னு ஆசிர்வாதமும் செய்யுறா.
கேட்டா தருவேனு இயேசு சாமி சொன்னாரு,
தட்டுனா திறப்பேனு சொன்ன வாக்கு மாறாதவரு.
அவரு சொல்லு மேல என் நம்பிக்கையும் வச்சேன்
அவர் கையில நானும் என் வாழ்க்கைய வச்சேன்.
விடிஞ்சதும் வந்து வாசல திறந்தேன்
விடிவு காலம் வருமானு இயேசுவ பாத்தேன்,
நாழி கொஞ்சம் போயி கடுதாசி வந்துச்சு
நல்ல அரசாங்க வேல கைமேல வந்துச்சு.
உண்மையா உழச்சேன் நம்பிக்கையா ஜெபிச்சேன்,
இன்னைக்கு கூர மேல ஆசிர்வாதம்
என் இயேசு சாமி தந்தாரு.
குறிப்பு:
“ ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்
அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்”