கருணை வடிவே..காஞ்சி முனியே... - தங்கமணி சுவாமினாதன்
தாயுமில்லைத் தந்தையுமில்லைத்..தானாய்த் தோன்றிய தரணீசா..
ஆதியுமில்லை..அந்தமுமில்லை..அகிலம் காக்கும் ஜகதீசா...
அம்மா என்னும் அமிர்தச் சொல்லை அழைக்க நீயும் விழைந்தாயோ..
புனிதவதியாம் திலகவதியை "அம்மையே" என்றே அழைத்தாயோ...
அம்மையே என்று அழைத்தால் மட்டும் போதாதென்று நினைத்தாயோ..
தாயின் கருப்பை நுழைந்து பத்துத் திங்கள் உறங்கும் ஆசை கொண்டாயோ..
பாரதமென்னும் புண்ணிய பூமியில் அவதரிக்கத் திருவுளம் கொண்டாயோ..
மங்களவதியாம் மகாலஷ்மியின் வயிற்றில் கருவாய் நுழைந்தாயோ..
ஆசைதீரப் பத்துத் திங்கள் தாயின் கருப்பை கிடந்தாயோ..
கிடந்தது போதும் என்று நினைத்து அகிலம் காக்கப் பிறந்தாயோ..
ஆதி சிவனே நீயே தெய்வக் குழந்தை வடிவில் வந்தாயோ..
சுவாமி...னாதன் என்ற பெயரைத் தாயார் விரும்ப நீயும் பெற்றாயோ..
தாயின் பெயரில் முதல் பாதியும் உந்தன் பெயரின் முதல் பாதியும்..
ஒன்றாய்ச் சேர்ந்து அன்றே நீயும் "மகாசுவாமி" ஆனாயோ..
பன்னிரண்டு அகவை மட்டும் பிறந்த மண்ணில் வாழ்ந்திட்டாய்..
பதிமூன்றாம் வயதில் காஞ்சி வந்து காவியுடையை அணிந்திட்டாய்..
ஆதி சங்கரர் தோற்றுவித்த காமகோடி பீடத்தின்..அறுபத்தெட்டாம்..
பீடத் தலைமை ஏற்று.. அகிலம் காக்கப் புறப்பட்டாய்..
பாரதம் முழுதும் உன் காலடி பதித்து..பக்தி நெறியை விதைத்திட்டாய்..
மடங்கள் பலப் பல எங்கும் நிறுவி ஆன்மிகம் வளர உழைத்திட்டாய்..
தர்மத்தின் வடிவம் நீயே..வேதங்கள் உருவும் நீயே..சத்தியத்தின் நிழலும் நீயே
ஆகம விதிகள் மீரா ஆலய மணியும் நீயே..ஜாதிகள் உனக்கு இல்லை..
மத பேதங்கள் அறவே இல்லை..தேடிவரும் பக்தருக்கெல்லாம்..
நல் ஆசிகள் அள்ளித் தந்தாய்..
கருணையின் ஒளியே போற்றி!ஜகத்தின் குருவே போற்றி!
ஆன்மிக அரணே போற்றி!வேதாகமப் பொருளே போற்றி!
ஐயனே நீ மீண்டும்..இப்புவியில் பிறக்க வேண்டும்...
எங்கள் அஞ்ஞான இருளைப் போக்கி..மெய்ஞானம் அளிக்க வேண்டும்.
{kunena_discuss:779}