பெண்கள் தினம்!!! - லீலா
எங்களுக்கு எதற்கு
தனியே ஒரு தினம்?
....
அந்த நாள் மட்டுமல்ல
அதற்கு முன்னே , பின்னே
இரு நாட்கள்
எங்களைப் பற்றி
பேசுவீர்கள்..
வாழ்த்துவீர்கள்
கொண்டாடுவீர்கள் ....
விளம்பரங்களில்
எங்களை போற்றுவீர்கள்
அதிலும்
உங்கள்
வியாபார சிந்தாந்தங்கள் ஆகிய
இலாப நோக்கங்கள் ஒளித்து
புகுத்துவீர்கள்.......
நாங்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதம்தனில்
ஒப்பற்ற அழகுதான்..
நீங்கள்
கற்பிக்கும் விதம்தனில்
வெள்ளை நிறத் தோல்
பெற்றதும் நாங்கள் பெறவில்லை
இந்த எல்லா வித
பேராற்றலையும் .....
தெருமுனைகளில்...
பூ கட்டி விற்று பிள்ளைகளை
கல்விச் சாலைக்கு அனுப்பும் நாங்கள்,
வெறியாக தாக்கும்
வெயிலில் அலைந்து
காய்கனி விற்கும் நாங்கள்,
குளிரூட்டப்பட்ட
அறைகளில்
நின்று கொண்டே
உள்ளே எண்ணற்ற
உடல் வலிகளை
பொறுத்துக்கொண்டு
உங்களுக்கு சேவை செய்யும் நாங்கள்,
உட்கார்ந்த இடத்தினில்
கணிப்பொறிகளை தட்டி
மென்பொருளில் மிக சுலபமாக வருமானம்
ஈட்டப்படுவதாக நினைக்கப்படும் நாங்கள்....
உங்களை போல் அல்லாமல்
எண்ணற்ற உடல் சிக்கல்களைக்
கொண்டவர்கள் தாம்...
மாதம் ஒருமுறை....
எங்கள் குருதி வழிய ...
அதே புன்னகையோடு
எங்கள் பணிகளை செய்து கொண்டுதான்
இருக்கிறோம்...
இதற்காக உங்களிடம்
நாங்கள் எதையும் கேட்பதில்லை...
உங்களைப் போல நாங்களும்
மனித வடிவம் தான்
சிறு சிறு மாற்றங்களுடனான
மனித வடிவம்
அவ்வளவே !
எங்களை விமர்சிக்காதீர்கள்...
எங்களுக்கு எந்த உடை என்றோ,
எந்த பணி என்றோ,
எந்த நேரம் என்றோ,
எந்த நன்னெறி என்றோ
என நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்
எங்களுக்கு தெரியும்
எது எப்பொழுது எங்கு தேவை என்று.
உங்கள் விமர்சனங்களுக்கு அப்பால்
நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம்
உண்மையாக பெண்மையைப்
போற்ற ஒருவேளை
சுயநினைவுடன் நீங்கள் தயாரானால்
ஒன்று செய்யுங்கள் போதும்..
எங்களை
கொண்டாட அவசியமில்லை..
உடலாலோ, மனதாலோ
இம்சிக்காமல்
சுயமரியாதையுடன்
எங்கள் பணிகளை
தொடர விடுங்கள்! ...
அவ்வளவே!.
{kunena_discuss:779}