பெத்த மனம் பித்து..!! - டோனா
பத்து மாதம் சுமந்து தான்
உன்னை பெற்றேனடி..
மீண்டும் பெண்னென்றதும்
கள்ளிப்பால் கொடுத்து கொல்ல
காத்திருந்தனரே..
கெஞ்சி கதறி அழுது
உன்னைக் காப்பாற்றி உலகில்
தவழச் செய்தேனடி...
கொஞ்சும் மொழியில் நீ
பேசியதை கண்கொட்டாமல்
பார்த்து சிலிர்த்தேனே...
பள்ளி செல்ல நீ அழுகையில்
என் மனம் கலங்காமல்
இருந்ததில்லையடி...
நல்லப் பிள்ளை என பிறர்
சொல்கையில் பறந்தேனே..
நான் வெளியில் சென்று வருகையில்
ஓடி வந்து அணைப்பாயடி..
பிரிந்த துன்பத்தை முத்தத்தால்
ஈடுச் செய்வேனே...
பாவாடைப் பருவத்தில் தினம்
என் வயிற்றில் நெருப்பு தானடி...
உன் புன்னகையில் நானே
சொக்கி போனேனே...
என் உயிரே நீயாக இருந்தாயடி...
ஏன் சென்றாய் இன்று..??
பெற்றவள் வளர்ப்பு சரியில்லை என ஊரே பேசுதடியம்மா...
அழவும் சக்தியின்றி
உட்கார்ந்திருக்கின்றேன் இப்பாவி...
எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் நீ
கேட்ட அனைத்தும் வாங்கி தந்தேனே...
நீ விரும்பிய வாழ்க்கை வாழ
உதவி செய்யவேன் என்று
ஏனடி நம்பவில்லை என்னை...
இன்று வந்தவன் முக்கியமா,,
நாங்கள் முக்கியமா என உன்னைக் குழப்பவில்லையடி..
ஒருமுறை என் மனம் கவர்ந்தவன் அவன் என்று
என்னிடம் கூறியிருந்தால் என்ன??
உன்னால் அக்காவின் கல்யாணம்
நின்று விட்டதடி..
அவளும் கனவுக் கண்டிருப்பாள் அல்லவா பெண்ணே..??
கோபம் வருகிறது..
ஆனால் பயத்தில் நெஞ்சம்
அழுகிறது..
அவன் என் கண்மணியை
கண்கலங்காமல் பார்த்துக்கொள்வானோ என்று..
ஒருமுறை உன்னைக் காண வேண்டும்..
கட்டிப்பிடித்து அழ வேண்டும்...
எப்போதடி கல்லானது உன் இதயம்...??
உன் பாசம் என்றடி விஷமானது..??
எல்லாம் கனவாய் மாறாதோ..??
மீண்டும் என் மடியில் உன்
முகத்தைப் புதைத்திடாயோ..??
கண்களில் நீருடன்..,,
உன் அபலைத் தாய்...
{kunena_discuss:779}