சுதந்திர தின சிறப்பு கவிதை - சத்யம் வத! - ரவை
ஆண்டுக்கொருமுறை
ஊர்கூடி கொடியேற்றி
கொண்டாடும்பெருநாள்
சுதந்திரதின நாள்!
ஆண்டவனை நீக்கியபின்
ஆள்கின்றோம் நாமே!
கூண்டிலேறி உண்மையினை
கூறும்நாள், சொல்லிடுவீர்!
விண்ணைத்தாண்டி உயர்
விண்ணுலகம் தொட்டும்,
மண்ணில் கணக்கில்லா
விந்தைகள் புரிந்தும்,
என்னபயன் கூறிடுவீர்!
ஏழ்மை தொடர்ந்திடுதே!
சொன்னதை செய்யாமல்
சீரழிவை தந்தோமே!
மக்களாட்சி போர்வையிலே
செல்வந்தர் ஆள்கின்றார்!
திக்கற்று ஏழைகளும்
தரித்திரத்தில் வாடுகிறார்!
தக்கார் வாயடைத்து
சுயநலமாய் வாழ்கின்றார்!
இக்கணமே முடிவெடுப்பீர்,
இந்நிலையை மாற்றிடவே!
விவசாயம் சீர்பெறவே
வேண்டியதை தந்திடுவோம்!
நவநவமாய் தொழில்செய்து
நாட்டுவளம் பெருக்கிடுவோம்
புவியினிலே எவரும் இனி
பசிப்பிணியில் வாடாமல்
உவகையுடன் வாழ்ந்திடவே
ஊர்கூடி தேரிழுப்போம்!