கவிதை - வாழ்க்கை கணக்கு - ஜெப மலர்
புரியாத கணக்கு போலவே
புதிராக இருக்கிறது வாழ்க்கை...
பின் அட்டையில் இருக்கும்
பதிலை புரட்டிப் பார்த்து
பதிவை அழித்து சரியாக்கி
சாதித்திடலாம் புத்தக கணக்கில்..
வாழ்க்கை கணக்கின் விடையை
வகுத்தவன் வைத்துக் கொண்டு
விடையில்லா கேள்வியோடு
தள்ளி விட்டான் உலகத்திற்குள்...
செய்தவற்றை திருத்தவும் முடியல..
செய்யப்போவதை அறியவும் முடியல...
பிழைகளும் நினைவில் நின்று
பிழிந்தெடுக்கிறது நிம்மதியை...
தொடங்கும் நாள் ஒவ்வொன்றையும்
தொகுத்து வாழ்ந்திடு சரியாய்..
சாதனையை படைத்திட சில
சோதனையை கடந்தாக வேண்டும்...