கவிதை - வெள்ளை வானில் கருப்பு நிலா! - கிருஷ்ண பச்சமுத்து
வெள்ளை வானில் கருப்பு நிலா!
கிழக்கு மேற்கென
திசையொன்றும் இல்லை!
இடம், வலம், மேல், கீழென
புறம் நோக்கியே அதன் இயக்கம்!
கருப்பு நிறம் ஒளிகவருமே?
இக்கார் நிலா மட்டும்
பேரொளியை
உமிழ்வதெப்படி?
காண்போர் விழிவழி நுழைந்து,
மனதெதுவென பலர்
அறியாத போது,
அம்மனதை தேடிக்
கண்டுபிடித்து,
ஒரு குண்டூசி
துளைப்பதெப்படி?
இவை பேசும் மொழிகள்
நேராய் மனதில் எழுதப்பட்டு
மகிழ்வைத் தருவதெப்படி?
இந்த நிலவை
ஈரடி தொலைவில்
ஒருவன் கண்டுவிட்டால்,
காதலில் மூழ்கி
கணத்தில் கைதாகிறானே!
வெள்ளை வான்
ஓய்வெடுப்பினும்,
அசையும் இன்னிலா
தோல் போர்வையில்
அழகாய் வெளிதெரிகிறதே!
இவ்வானிற்கு மட்டும்
கருப்பு வானவில்
எல்லைகளா?
ஓய்வில்லா நேரத்தில்
சிவப்பு மின்னல்
தோன்றுகிறதே!
இவ்வான்முழுதும்
நீர்த்திரையால்
சூழப்பட்டு பின்
சிலதுளிகளில்
மழை பொழிகிறதே!
இவையனைத்தையும் காக்க
தோல் போர்வையுடன்
இருவரிசையில் மயிர்வீரர்கள்!
கருப்பு வெள்ளை கொண்ட
அவள் விழியில் ஆயிரமாயிரம்
நகலெடுக்கா ஓவியங்கள்!