Flexi Classics தொடர்கதை - வேருக்கு நீர் - 07 - ராஜம் கிருஷ்ணன்
பெரியப்பா பூஜையை முடித்துவிட்டு ஒரு வெள்ளித் தம்ளர் நிறையப் பாலைப் பருகுகிறார். காதில் துளசியுடன் ஊஞ்சலில் வந்து உட்காருகிறார். நீருவும் அவளுடைய வருங்காலக் கணவனும் காரில் ஏறிக் கொண்டு நகைக் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் போகின்றனர். ரவி கல்லூரிக்குப் போய்விட்டான். சின்னம்மா சமையல்கட்டுக்குப் போகிறாள்.
"அப்புறம்?"
யமுனா அவரை நிமிர்ந்து நோக்குகிறாள்.
"உங்கப்பா ஏதானும் பாங்கியில் பணம் போட்டிருக்கிறானா?"
யமுனா கைவிரலால் ஊஞ்சற்பலகையில் கோலமிடுகிறாள் தலைகுனிந்த வண்ணம்.
"எதற்குக் கேட்கிறீர்கள் பெரியப்பா?"
"எதற்கா? உனக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா? குறைந்த பட்சம் இருபது வேணுமே?"
"நான் அப்படியெல்லாம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக இல்லை பெரியப்பா. அப்பா உங்களுக்கு எழுதவில்லை?"
"அவன் கிடக்கிறான். அந்த சர்வ சேவா சங்கத்துக்காரனும் கூட வந்து போனான். என்ன அசட்டுத்தனம்? பின் உன் வயசுப் பெண் எனக்குக் கல்யாணம் செய்துவையென்றா சொல்வாள்? இந்த வயசில் கன்னியாக இருப்பேன்; சமூக சேவை செய்வேன்னு சொல்றதுதான். இப்படிச் சொன்னதுங்க மனசு தெரியாமப் பெத்தவங்களும் இருந்தா பஸ்ஸைத் தவறவிட்டாப் போல வாழ்க்கையைத் தவற விட்டுவிட்டுத் தலை நரைச்சும் தளர்ந்தும் போகிறதுங்க?"
"நான் அதைச் சொல்லலே பெரியப்பா, எனக்குக் கல்யாணம்னா, வரதட்சணை கேட்கிறவர்களுக்கு நானே சம்மதிக்க மாட்டேன் என்று சொல்ல வந்தேன்."
"ஓகோ, அதைச் சொல்றியா?" என்று பெரியப்பா சிரிக்கிறார். அத்தனை பொய்ப் பற்களும்