கருத்துக் கதைகள் – 13. அஞ்சுவதற்கு அஞ்சுக... - தங்கமணி சுவாமினாதன்
அந்தப் புல் வெளியில் கழுதை ஒன்று வெகு நிம்மதியாய் மேய்ந்து கொண்டிருந்தது.
அருகே சில மான்களும் மேய்ந்துத கொண்டிருந்தன.குட்டையான மரம் ஒன்றில் சேவல் ஒன்று அமர்ந்திருந்தது.
அப்போது சிங்கம் ஒன்று மிகுந்த பசியோடு இரையைத் தேடியபடி அங்கு வந்தது.அதன் கண்களில் புல் மேய்ந்து கொண்டிருந்த கொழுத்த கழுதை பட்டது.எப்படியாவது கழுதையை அடித்து இரையாக்கிக் கொண்டுவிடவேண்டும் என எண்ணியது சிங்கம்.
கழுதையின் அருகில் போய் அதனை அடிக்க முயன்றது.
மரத்தின் மீதிருந்த சேவல் சிங்கத்தைப் பார்த்தது.
உடனே அது கொக்கரக்கோ என கூவியது.பொதுவாய் வலிமையும் வீரமும் கொண்ட சிங்கத்திற்கு இரண்டு விஷயங்கள் பயமளிக்கக் கூடியவை.ஒன்று சிங்கத்திற்கு பாம்பைக் கண்டால் பயம்.அதைக் கண்டால் ஓடியே போய்விடும்.இரண்டாவது சிங்கத்திற்கு சேவல் கூவும் சப்தம் கேட்டால் மிகவும் பயம்.சேவலின் கூவும் சப்தம் கேட்டால் வெகு தொலைவு ஓடிவிடும்.
இப்போது கழுதையை அடித்துக் கொல்ல நினைத்து முயற்சித்த சிங்கம் சேவலின் கூவல் கேட்டு அவ்வைட விட்டு மிக வேகமாய் ஓடியது.
அப்படி ஓடிய சிங்கத்தைக் கண்ட கழுதை சிங்கம் தன்னைக் கண்டு அஞ்சித்தான் பயந்து ஓடுவதாக நினைத்தது.ஆஹா..நம்மைக் கண்டு சிங்கம் கூட பயப்படுகிறதே?நாம் மிகவும் பலசாலி.இனி நாம்தான் இந்தக் காட்டுக்கு ராஜாவாக இருக்கவேண்டும்.இவ்விஷயத்தை காட்டில் உள்ள எல்லாரிடமும் சொல்லி விடவேண்டும்.முதலில் நம்மைக் கண்டு பயந்து ஓடிய சிங்கத்திடம் தெரிவிக்க வேண்டும் என நினத்து கொஞ்சமும் யோசனையின்றி சிங்கத்தை துரத்திக்கொண்டு ஓடியது கழுதை.
சேவலின் கூவல் சப்தம் கேட்காத தொலைவுக்குச் சென்ற சிங்கம் நிம்மதியாயிற்று.
தன்னைத் தொடர்ந்து துரத்தி வந்த கழுதையை அடித்துத் தின்றது சிங்கம்.அசட்டுத் துணிச்சலால் அழிந்து போனது கழுதை.
சில சமயம் வலிமையானவர்கள் சில காரணுங்களுக்காக தோற்பது போல் .நடிப்பதுண்டு.அதைக்கண்டு வலிமையற்றவர்கள் அவர்களோடு மோத நினைப்பது பெரும் தவறாகும்.எதிராளியின் வலிமையறிந்து அவர்களோடு மோதவேண்டும்.
கதை சொல்லும் கருத்து:
அசட்டுத் துணிச்சல் ஆபத்தாய் முடியும்.