பாதகம் செய்தவரைக் கண்டால் - ஜெய்
“அம்மா, என் friend போன் பண்ணினான். இங்க பக்கத்துல இருக்கற RKM காம்ப்ளெக்ஸ்ல குளிருக்கு போடற ஸ்வெட்டர்ஸ் கிடைக்குமாம். நான் போய்ப் பார்த்துட்டு வந்திடவா”, என்று அம்மாவிடம் கேட்டபடியே வந்தான் அகில்.
“ஏண்டா அது என்ன பக்கத்துலையா இருக்கு. ஆட்டோல போனாலே 20 நிமிஷம் ஆகும். நாளைக்கு கார்த்தால flight. கடைசி நேரம் வரை அலைவியா. அந்த ஒரு ஸ்வெட்டர் இல்லைனா என்ன. இருக்கறது வரை எடுத்துட்டு போ அகில். இங்க வாங்கறது எப்படியும் அங்க இருக்கற குளிர் தாங்குமா தெரியலை. அங்க போனப்புறம் பார்த்து வாங்கிக்கலாம் இல்லை”, நாளை வேலை விஷயமாக லண்டன் கிளம்பும் மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அம்புஜம்.
“இல்லைமா, போன உடனேயே அங்க குளிர் காலம் ஆரம்பிக்குது. அங்க விக்கற விலைக்கு உடனேயே செலவு செய்ய முடியாதும்மா. நான் நம்ம ஆட்டோ அண்ணாவை வரச் சொல்லி ஆட்டோலையே போயிட்டு அதுலேயே வந்துடறேன்மா. ஒரு மணி நேரம் கூட ஆகாது. கடையும் தெரியும். ஜஸ்ட் போய் வாங்க வேண்டியதுதான். ஒண்ணுக்கு ரெண்டா இருந்தா நல்லதுதானே.” தன் அம்மாவை கன்வின்ஸ் செய்ய ஆரம்பித்தான் அகில்.
“சரிப்பா போயிட்டு சீக்கிரம் வந்துடு. ரொம்ப நேரம் பண்ணாத. ஆட்டோ அண்ணனுக்கு போன் பண்ணிட்டியா. அவரை waitingல இருக்க சொல்லு. அப்போதான் சீக்கிரம் வேலை முடிப்ப நீ. போயிட்டு ஒரு 12 மணிக்குள்ள வந்துடு அகில். மத்யானம் மாமா, அத்தை எல்லாம் வரேன்னு சொல்லி இருக்காங்க. அவங்க வந்தா பேசவே டைம் சரியா போய்டும். சீக்கிரம் வந்தாதான் எடுத்து வைக்கறது எல்லாம் பண்ண முடியும்.
“பண்ணிட்டேன்மா, இன்னும் ஒரு 1௦ நிமிஷத்துல வரேன்னு சொல்லிட்டாரு. சரிமா, நான் போயிட்டு அதுக்குள்ளே திரும்பிடறேன். இன்னும் 2,3 திங்க்ஸ்தான் எடுத்து வைக்கணும், ரொம்ப time ஆகாது. அப்புறம் சாயங்காலம் என் friends வரேன்னு சொல்லி இருக்காங்க. அவங்களுக்கும் ஏதானும் அப்படியே சாப்பிட வாங்கிட்டு வரேன்” என்றபடியே கடைக்குக் கிளம்பினான் அகில்.
“டேய் பாலு அந்தக் கடை இந்த floorல இல்லடா, நீ சொன்ன இடம் சரிதானா, அம்மா வேற சீக்கிரம் வர சொன்னாங்கடா, ஓடணும். “
“ஓ அப்படியே லைன்ல இரு நான் அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்”
“ஹே அகில் அது நாலாவது மாடில இல்லடா, மூணாவது மாடியாம். சாரிடா.”
“ஓ பரவா இல்ல விடு, இங்க செம்ம கூட்டமா இருக்கு, லிப்ட் உள்ள போகப் போறேன் லைன் கட் ஆகிடும். நான் வாங்கிட்டு உன்னைக் கூப்பிடறேன்”
லிப்ட்டில் இருந்து வெளி வந்தவுடன் மறுபடி போன் அடிக்க அவன் அம்மா இப்பொழுது லைனில்,”என்னடா அகில் இது, இத்தனை லேட் ஆகுது”
“இல்லமா கடை தெரியலை இப்போதான், floor கண்டுபிடிச்சு போகப்போறேன் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வாங்கிடுவேன். வந்துடறேன்மா”, அவன் போன் பேசிக்கொண்டே நடக்க பின்னாடியே கூட்டமாக வந்த ஆட்கள் எஸ்க்குலேட்டரில் இறங்க அவசரப் பட, “சார் ஏன் இப்படி தள்றீங்க. அம்மா இங்க ரொம்ப கூட்டமா இருக்கு நான் உங்களை கூப்பிடறேன், சார் தள்ளாதீங்க, அம்ம்மாமாமா .............”, பின்னாடி கூட்டத்தில் வந்த ஒருவர் தள்ளியதில் esculator கைப் பிடி ஓரமாக இருந்த அகில் balance தவறி தலைக் குப்புற தரை தளத்தில் விழுந்தான்.
கீழே விழுந்த அகில் தலையில் அடிபட்டு உடனே மயக்கமாக, நிமிட நேரத்தில் நிகழ்ந்துவிட்ட சம்பவத்தால் யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனைச் சுற்றி கூட்டம் கூட ஆரம்பிக்க, ஒருவரும் அவன் நிலை என்ன என்று பார்க்காமல் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.
அதற்குள் சம்பவ இடத்துக்கு வந்த செக்யூரிட்டி எல்லாரையும் விலகச் சொல்ல, ஆள் ஆளுக்கு ஒன்று பேசியபடி ஒரு 2 இன்ச் நகர்ந்து நின்றார்கள். இதற்குள் அந்த மால், அதில் உள்ள லிப்ட், பாதுகாப்பில்லாத சிறிய எஸ்க்குலேட்டர் இதைப் பற்றி மக்கள் பேச ஆரம்பிக்க, டென்ஷன் ஆன செக்யூரிட்டி மாலின் ஓனருக்கு போன் செய்தான். அவர் உடனே போலீஸ்க்கு போன் பண்ணச் சொல்லி, அதுவரை யாரையும் சம்பவ இடத்தில் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்ல, செக்யூரிட்டியும் எல்லாரையும் கலைந்து போகும்படி கத்த ஆரம்பித்தான்.
“அண்ணே என்ன இத்தனை லேட் ஆகுது, இங்க வேற சொந்த்தக்காரங்க எல்லாம் வந்து வெயிட் பண்றாங்க, அகில் வந்துட்டானா, அவன் போனுக்கு போட்டா, switch offன்னு வருது”, அகிலின் அம்மா கவலையுடன் ஆட்டோ அண்ணாவிடம் கேட்க்க,
“தெரியலைம்மா, நானும் தம்பிக்குத்தான் வெயிட் பண்றேன். இன்னும் ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு அப்படியும் வரலைனா நானே உள்ள போய் தம்பியைத் தேடறேன்”
“சரிங்கண்ணா, அவன் உள்ள கூட்டமா இருக்குன்னு சொன்னான், பேசிட்டு இருக்கும்போதே லைன் கட் ஆகிடுச்சு. கடை மூணாவது மாடில இருக்கு, நீங்க அங்க பாருங்க, அங்க இல்லைனா திரும்பி ஆட்டோ நிக்கற இடத்துக்கே வந்துடுங்க, அப்புறம் அவன் ஒரு பக்கம் நீங்க ஒரு பக்கம்ன்னு தேடப் போறீங்க”
“சரிம்மா, நான் பார்த்துக்கறேன், நீங்க கவலைப்படாம இருங்க. நான் தம்பியப் பார்த்த உடனே உங்களை கூப்பிடறேன்.”, என்று கூறியபடியே, அகில் வரும் வழியைப் பார்த்து நின்றார் ஆட்டோ அண்ணா.
பத்து நிமிடத்திற்கு மேல் ஆகியும் அகில் வராததால் அவனைத் தேடி மூன்றாவது மாடிக்கு சென்றார் ஆட்டோ அண்ணா.
இதற்குள் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக ஆரம்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் செக்யூரிட்டி மீண்டும் முதலாளியை அழைத்தான்.
“சார், இங்க கூட்டம் அதிகமாகிடுச்சு சார். ஆள் ஆளுக்கு கத்த ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாரும் இந்தப் பையன் கிட்ட வரப் பார்க்கறாங்க. இப்போ என்ன பண்ண”
“யோவ் அந்த பையன் பக்கத்துல யாரும் வராம பார்த்துக்கோயா, நான் இன்ஸ்பெக்டர்க்கிட்ட பேசிட்டு உன்னைய திரும்பி கூப்பிடறேன். அப்புறம் என்ன பண்றதுன்னு பேசலாம்”
“சரிங்க சார், சீக்கிரம் பண்ணுங்க,கிட்டத்தட்ட 15௦ பேரு சுத்தி நிக்கறாங்க. உடனே ஹாஸ்ப்பிடலுக்கு தூக்கிட்டு போகணும்ன்னு கத்தறாங்க சார்”
“சரியா, யாரையும் தொட விடாதே, 5 நிமிஷத்துல கூப்பிடறேன்”
“ஹலோ இன்ஸ்பெக்டர் எப்படி இருக்கீங்க”
“நான் நல்லா இருக்கேன் சார், என்ன திடீர்ன்னு நீங்களே போன் பண்றீங்க”
“இல்ல உங்களால ஒரு காரியம் ஆகணும், நம்ம RKM மால்ல ஒரு ஆக்ஸிடென்ட்,. கூட்டம் ரொம்ப அதிகமா இருந்ததால எஸ்க்குலேட்டர்லேர்ந்து ஒரு பையன் தவறி விழுந்துட்டான். இந்த விஷயம் வெளில தெரிஞ்சா மால் பேரு கெட்டுப் போய்டும், நீங்கதான் விஷயத்தை எப்படியாவது முடிச்சு தரணும்”
“என்ன சார் இது இதோட ரெண்டு வாட்டி ஆகிடுச்சு, அப்போவானும் பரவா இல்லை. ஏதோ அதுலயே விழுந்து லேசா அடியோட போச்சு. நானும் உங்ககிட்ட அதை மாத்தச் சொல்லி சொல்லிட்டு இருக்கேன். அதே மாதிரி லிப்ட் பக்கத்துலையே எஸ்க்குலேட்டர் இருக்கறதும் சரி இல்லைன்னு சொல்லி இருக்கேன். சரி நீங்க செக்யூரிட்டிக்கிட்ட சொல்லி அந்தப் பையன் பக்கத்துல யாரும் போகாம பார்த்துக்கோங்க. நான் இன்னும் பத்து நிமிஷத்துல ஸ்பாட்ல இருக்கேன்.”, தன் இட மாறுதலுக்கு இவரின் உதவியை நாடிய தலைவிதியை நொந்தபடியே கிளம்பினார் இன்ஸ்பெக்டர்.
“யோவ் செக்யூரிட்டி, நான் இன்ஸ்பெக்டர்க்கு போன் பண்ணிட்டேன், இது போலீஸ் கேஸ் யாரும் பக்கத்துல வரக் கூடாதுன்னு சொல்லி கொஞ்ச நேரம் சமாளி, அதுக்குள்ளே அவர் வந்துடுவாரு. சரியா”