காவற்ப் படை - ஜான்சி
அன்று அந்த காலைப் பொழுது மிகவும் ரம்யமாக விடிந்திருந்தது. பல நாட்களாக தொடர்ந்திருந்த மழை முன்னிரவே ஓய்வு எடுத்திருக்க கழுவி விடப் பட்ட சாலை பளிச்சென்று இருந்தது.புது உடை அணிந்த குட்டிப் பாப்பா போல தன் சுத்தமான இலைகளை பெருமிதமாக அசைத்து தலை ஆட்டின மரங்கள்.
போக்குவரத்து நெரிசல் அற்ற காலை 7.30 மணி. அந்த பேருந்து நிலையத்தில் மக்கள் வருவதும் சில நிமிட இடை வெளியில் வந்து கொண்டிருந்த பேருந்துகளில் அவசர அவசரமாக ஏறி அமர்ந்து பயணிப்பதுமாக இருந்தனர்.அந்த பர பரப்பிற்க்கே சம்பந்தமில்லாததுப் போல அந்த நால்வரும் வெகு தீவிரமாக தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
.....ஏண்டா இன்னைக்கு லேட்?
காலையிலேயே பக்கத்து வீடு அண்ணன் கடைக்கு கூட்டிட்டு போயிட்டார்டா .. அவர் கிட்ட வர முடியாதுன்னு எப்படி சொல்றது? ரொம்ப பாசமா இருப்பார்டா..
ஹ்ம்ம்ம் ...நீ ரொம்ப லக்கிடா ....எவ்வளவு பாசமான அண்ணன் இல்ல... சரி என்ன சாப்பிட்ட நீ?
வேறென்ன பிஸ்கட் தான்..
ஏய் என்னடா அங்க அரட்டை? காலையிலேயே வேலை வெட்டி இல்லாதவங்க மாதிரி பேச்சு.
ஏய் பெரிய அண்ணன் வந்துட்டார்டா அப்புறம் பேசலாம்.
சரி ....
இன்னைக்கு நம்மளோட திட்டம் என்ன அண்ணா ?
வேறென்ன இந்த சுத்து வட்டாரத்திலேயே ஒரு தப்பும் நடக்க கூடாதுடா நம்மள தாண்டி ஒரு திருட்டும் நடக்க நம்ம அனுமதிக்க கூடாது. அதனால எப்போதுமே ரொம்ப அலர்ட்டா இருக்கணும்டா என்ன எல்லாருக்கும் புரிஞ்சுதா?
நீங்க சொல்றது சரிதான் அண்ணா . அப்படி நடக்க நாம விட்டுருவோமா ......
நேற்று கூட இதே பஸ் ஸ்டாப்பில ஒருத்தன் சந்தேகத்துக்கிடமா நிறைய பொருட்களை தன் வண்டியில ஏத்திக்கிட்டு போனான் நான் விடுவேனா என்ன?........ அவனை எப்படி துரத்தி னேன் தெரியுமா? மீசை துடிக்க தன் வீர தீர பராக்கிரமத்தை சொல்லி முடிக்க..
நீ ரொம்ப தைரிய சாலி தாண்டா ....
என்னதான் இந்த மக்களுக்காக நாம இரவு பகலா உழைச்சா லும் ஒரு பய நம்மள மதிக்கிறானாடா நன்றி கேட்டவனுங்க........ பெரு மூச்சு கிளம்பியது.
அதெல்லாம் நாம யோசிக்க கூடாது நம்ம கடமையை மட்டும் செய்யணும் புரியுதா........
ம்ம்ம் .. அதுவும் சரிதான்.
சரி நம்ம கருப்பன எங்க காணோம்?
அங்க பாரு நொண்டிக்கிட்டே வர்றான் ...
ஏண்டா கருப்பா அதான் கால்ல அடிப்பட்டிருக்கே அப்புறமும் ஏண்டா வந்தே?
சும்மா இருடா அதிகமா ஒண்ணும் படல .. வாங்க நம்ம வந்த வேலையை பார்க்கலாம்....
உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போயிடுச்சு கருப்பா.......
டேய் அங்க பாருங்கடா அந்த கார்ல ஏதோ கொண்டு போறாங்க .......
ரொம்ப சந்தேகமா இருக்கு......
வாங்கடா இத இப்படியே விட கூடாது.........
ஆக்ரோஷமாக அந்த வண்டியை பின் தொடர்ந்து துரத்த தொடங்கினார்கள்.
உர்ர்........உர்ர்.... வள்.. வள்.. வள்.. வள்..
பேருந்து நிலையத்தில் இருந்த நபர் சலித்து கொண்டார். இந்த நாய்ங்களோட ரொம்ப தொந்தரவா போயிடுச்சு . ஒரு வண்டிய போக விடுதா... ச்சை .