உண்மை சொன்னால் நேசிப்பாயா? - பிந்து வினோத்
This is (guest) entry #06 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
சம்யுக்தாவை பார்த்த திவாகரின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
எப்படி இவள் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கிறாள்...???
மனதினுள் கேள்வியும் ஆர்வமும் ஒன்றாய் தோன்ற அவளையே பார்த்திருந்தான் அவன். அவளும் அவன் பக்கம் பார்ப்பது போல தான் இருந்தது... ஆனால் பார்க்கவில்லை!
அவளும் இதையே தான் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செய்கிறாள்.
அவனும் அவன் பங்கிற்கு அவளை பார்த்துக் கொண்டே இருக்கிறான்....!
அவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவருமே படிப்பில் பயங்கர கெட்டி. ஆனால் திவாகர் பக்கா ‘பழம்’, சம்யுக்தா ரவுடியிலும் பக்கா ‘ரவுடி’.
படிப்பு விஷயத்தில் அவளுக்கு கெடுபிடியாக நேரடி போட்டியாக இருந்தவன், விளையாட்டு, கலை போன்ற மற்ற விஷயங்களில் அவளை பார்த்து ரசிக்க மட்டும் செய்வான்.
இதற்கிடையில் எப்போது அவனுக்கு அவள் மீது காதல் ஏற்பட்டது என்று சொல்வது கடினம். எப்போதோ ஏதோ ஒரு கணத்தில் அந்த மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
கல்லூரி முடியும் தருவாயில் இதற்கு மேல் மறைத்து வைத்தால் சரி இல்லை என்று தோன்றவும் அவளிடம் தயக்கத்துடனே தன் காதலை சொன்னான்...!
சம்யுக்தாவின் பதில் தான் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது!
அவள் சரி என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை!
“இப்போ எப்படி ஒரு டெசிஷன் எடுக்க முடியும் திவா, படிச்சு முடிச்சு கொஞ்சம் செட்டில் ஆகுவோம்... அப்புறம் யோசிச்சு முடிவு செய்வோம்...” என்றாள்.
அவள் மறுக்காததற்கு சந்தோஷப்படுவதா, இல்லை சரி என்று ஏற்றுக் கொள்ளாததற்கு வருத்தப் படுவதா என்று புரியாமல் அவன் முழிக்க தான் முடிந்தது!
படிப்பு முடித்து அவன் அவனுடைய குடும்ப பிஸ்னஸ் பார்க்க தொடங்க, சம்யுக்தா மேல் படிப்பு படித்து ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள்.
நடுவில் இரண்டு வருடங்கள் ஓடி இருந்தது....
அந்த வருடம் நடந்த ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் டேவில் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.
அவளின் படிப்பு, புது வேலை என அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தவனுக்கு அவள் அப்போதாவது தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்வாளா என்ற ஆவல் இருந்தது.!
மீண்டும் அவன் அவளிடம் தன் காதலை பற்றி பேச்சை எடுக்க,
“ப்ச்... என்ன திவா நீங்க... இப்போ தான் நான் வேலையில் சேர்ந்திருக்கேன்.... நீங்க உங்க கம்பெனியில் ஓரளவுக்கு செட்டில் ஆகி இருக்கீங்க, இதுக்குள்ள கல்யாணம் செய்து என்ன செய்ய போறோம்?” என்றாள்!
அப்போது முழித்தாலும், அவளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த ஐந்து ஆண்டுகளில் கம்பெனி போர்டில் மெம்பர் ஆனதுடன். ஒரு தனி கம்பெனியை திறம் பட நடத்தவும் ஆரம்பித்திருக்கிறான்....
இந்த முறை அவளிடம் நேரடியாக ஒரு பதிலை கேட்டு தெரிந்து கொண்ட விட வேண்டும்....
சம்யுக்தா பல நாட்களுக்கு பின் சந்தித்த தோழிகளுடனும், அவளுடைய நெருங்கிய தோழியான ப்ரியாவுடனும் கதை அளந்து கொண்டிருந்தாள்... ஆனால் அவளின் கவனம் முழுவதும் சற்று தொலைவில் நின்றிருந்த திவாகரிடமே இருந்தது....!
அவர்கள் இருவரும் சந்தித்து சில வருடங்கள் ஆகி இருந்தாலும், அவனை பற்றி மற்ற நண்பர்கள் வழியாக அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருந்தாள்....
இப்போதும் அதே ‘பழமாக’ தான் இருக்கிறானா???? அதே போல் தயக்கதுடன் தான் வந்து பேச போகிறானா??? இல்லை...
அவள் யோசிக்கும் போதே, அவன் அவளை நோக்கி வருவது தெரிந்தது....
அவளையும் அறியாமல் அவளின் இதயம் சில துடிப்புகளை ஸ்கிப் செய்து துடித்தது....
இந்த வருடம் என்ன ஆக போகிறது???
ஒரு எதிர்பார்ப்புடன் அவனை எதிர்கொள்ள காத்திருந்தாள் சம்யுக்தா.
திவாகர், சம்யுக்தாவின் அருகே சென்று,
“ஹாய்...” என்றான்.
“ஹாய் திவா....” என்றவள், ஒரு விதமான ஆர்வத்துடன் அவனை பார்த்தாள்.
ப்ரியா அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, சம்யுக்தாவை பார்த்து ரகசியமாக கண் சிமிட்டினாள்.
அவளை செல்லமாக கண்களாலேயே கண்டித்து விட்டு மீண்டும் திவாகரை பார்த்தாள் சம்யுக்தா.
“உன்னோட பேசனும் சம்யுக்தா....” என்றான் அவன்.
இன்னும் அதே தயக்கம்... அவளுள் மெல்லியதாக ஏமாற்றம் எட்டி பார்த்தது...
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு,
“பேசலாமே.... வா ப்ரியா, திவா என்ன சொல்றார்ன்னு கேட்போம்... “ என்றாள்.
திகைத்தாலும், சமாளித்துக் கொண்டு,
“ப்ரியா, இங்கே இருக்கட்டுமே....நாம பேசிட்டு வருவோம்....” என்றான் திவாகர்.
பரவாயில்லையே! கொஞ்சம் முன்னேறி இருக்கிறான் என மனதினுள் வியந்தவள்,
“ஓகே.... பேசுவோம் வா....” என்றபடி அவனுடன் நடந்தாள்.
மெல்ல பேச்சை தொடங்கினான் திவாகர்.....
“நான் என்ன பேச போறேன்னு உனக்கே தெரியும்ல....”
“தெரிஞ்சா என்ன, தெரியலைனா என்ன? நீ பேச தானே வர சொன்ன, இப்போ பேசு....”
“சம்யுக்தா, அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி எப்போதுமே என் மனசில நீ மட்டும் தான்....”
“ப்ச்... திவா....”
அவள் மேலே பேசும் முன், குறுக்கிட்டு,
“இந்த தடவையும் அதே பழைய பல்லவியை பாடாதே சம்யுக்தா.... என்னை பிடிச்சிருக்கு, இல்லை பிடிக்கலைன்னு நேரா சொல்லிடு....” என்றான்.
“சொல்லிட்டா மட்டும்....”
அவளை பேச விடாமல் குறுக்கிட்டு,
“ஏன் இப்படி என்னை இம்சை செய்ற? எனக்கு வேற பொண்ணுங்களே கிடைக்க மாட்டாங்களா என்ன? உன்னை நான் உண்மையா லவ் செய்றேன் அதான் பொறுமையா இருக்கேன்... சினிமாவிலேயும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி, பொண்ணுங்க ஏன் இப்படி ஆம்பளைங்களை அலைய விடுறீங்க? அதுல உங்களுக்கு என்ன சந்தோஷம்?” என்று படபடத்தான் திவாகர்.
“ரொம்ப பேசுறீங்க திவா.... பொதுப்படையா எல்லா பொண்ணுங்களும் அப்படின்ற மாதிரி பேசுறது ரொம்ப ரொம்ப தப்பு.... என்னவோ பொண்ணுங்க சினிமாவில வர மாதிரி அப்படி செய்றாங்க, இப்படி செய்றாங்கன்னு சொல்றீங்களே, சினிமால ஹீரோ லாரி முன்னாடி விழ சொன்னாலும் விழுவார் நீங்க விழுவீங்களா? அந்த விஷயத்துல நீங்க ஜீரோ தானே?” சம்யுக்தாவின் குரலிலும் கோபம் இருந்தது.
“ஓ, அப்படி ஒரு ஆசை வேற உனக்கு இருக்கா? நான் லாரி முன்னாடி போய் விழுந்து அமரர் ஆகிடுவேன், நீ ஒரே ஒரு ஊதுபத்தி மட்டும் வச்சுட்டு என்னை மறந்திருவ அப்படி தானே????”
திவாகர் முதல் முதலாக அப்படி, கொஞ்சம் கோபமாக பேச, சம்யுக்தா தன் கோபத்தை மறந்து அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.
“அப்படி எல்லாம் போய் விழ நான் சொல்ல மாட்டேன்... ஆனால் திவா, சின்ன வயசுல இருந்து ஒரு ரியல் லைஃப் ஹீரோவை கல்யாணம் செய்துக்கனும்னு எனக்கு ஆசை.... எங்கப்பா ஆர்மில பெரிய ரேங்கில இருந்தார்.... என் தம்பி படிப்புல மட்டுமில்லை, கிரிகெட் பவுலிங்லேயும் புலி.... லைப்ன்னு இருந்தா இப்படி தான்னு டிஃபைன் செய்து வாழாமல் ஒரு த்ரில் வேணும்.... ஒரு ஹீரோயிசம் வேணும்...”
“சோ நான் ஆர்மில சேர்ந்து சண்டைக்கு போனால் சரின்னு சொல்வீயா, இல்லை கிரிக்கெட் விளையாடி உன் தம்பி பவுலிங்கை கிழி கிழின்னு கிழிச்சா சரின்னு சொல்வீயா?????”
“சும்மா விளையாடாதீங்க திவா....”
“இல்லை சம்யுக்தா, ஐ ஆம் சீரியஸ்... நம்ம காலேஜ்க்காக அலும்னி அசோசியேஷன்ல கிரிக்கெட் மேட்ச் நடத்த போறாங்க... அதுல உன் தம்பி விளையாடுற டீமுக்கு ஆபோசிட் டீம்ல நான் விளையாடுறேன்.... அவன் பாலை கிழி கிழின்னு கிழிச்சு ஒரு ஓவர்ல ஆறு சிக்சர் அடிச்சு காட்டுறேன்.... உன் அளவுக்கோல்ல அது ஹீரோயிசம் தானே??? அப்போவாவது இன்னும் ஒரு வருஷம் இரண்டு வருஷம்னு இழுக்காமல் என்னை அக்ஸப்ட் செய்துப்பல????”