என்னவனாகிய என் அவன்! - புவனேஸ்வரி
“ Best Friends Never Propose Each Other!
But They Feel Bad If Any One Gets Committed With Some Other”
ஹாய் ப்ரண்ட்ஸ்! மேலே உள்ள ஆங்கில வாசகம் எனக்கும் சரி, உங்களுக்கும் சரி புதிதான ஒரு விஷயம் இல்லைன்னு நம்புறேன். நாமளே மறக்கனும்னு நினைச்சாலும் ஃபேஸ்பூக் நியூஸ்ஃபீட்ல தினமும் ஒரு தடவையாச்சும் இந்த போஸ்ட் ஏதாவது ஒரு பேஜ்ல போடுவாங்க.
சிலருக்கு இந்த பதிவு சந்தோஷமான நினைவுகளை அள்ளித் தரும். சிலருக்கோ கணமான வலியை கொடுக்கும். வலியோ சந்தோஷமோ, நம்ம வாழ்க்கையில் மறக்கமுடியாத பகுதிகளில் இதுவும் ஒன்னுன்னு நம்பறேன்.
ஆக, இதில் எது தப்பு எது சரின்னு வாதிக்காமல், பிரதிவாதங்களைப் பற்றியும் சிந்திக்காமல், இதே சூழலில் பயணித்த “ சரித்திரன்- ஆதர்ஷினியின்” வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம். வாங்க!
குவின்ஸ்டவுன் , நியூசிலார்ந்து!
ஏசி அறையில், போர்வை தந்த கதகதப்பில் தனது ஆஜாகுபவ தேகத்தை மறைத்தபடி அந்த கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தான் சரித்திரன். அவன் கைகளில் இருக்கும் அந்த கடிதம், கடந்த ஐந்து ஆண்டுகளில் கடல் தாண்டி அவனுக்காக வந்த எழுபத்தி இரண்டாவது கடிதம். மணி மணியான எழுத்துக்களின் இடையில் கண்ணீர்த்துளிகள் விழுந்திருக்கலாம் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது.
என்ன தான் உலகம் பேஸ்பூக், வாட்ஸ் அப், ஸ்கைப் என்று முன்னேறி இருந்தாலும், ஒரு பேனா மை தரும் சுகம் வேறு எதிலும் இல்லை. இது சரித்திரனின் தனிப்பட்ட கருத்தும் விருப்பமும் ஆகும். அதை அறிந்தவர்கள் இந்த புவியில் இருவரே! முதலாவது அவன் பிறப்பிற்கு காரணமான அன்னை ஜானவி. இரண்டாவது, அவன் ஜீவனுக்கே பொருள் தந்த அவள்!
பலமுறை வாசித்து மனப்பாடமாகியிருந்த கடிதத்தை மீண்டும் வாசித்தான் அவன்.
கண்ணா,
எந்த தாய்க்கும் என் நிலை வந்துவிடக் கூடாது. நான் இங்கு நலம். நீ நலமா? என்று ஆரம்பிக்க வேண்டிய கடிதத்தை நான் பீதியுடனும் கண்ணீருடனும் ஆரம்பிக்கும் காரணத்தை நீ நன்கறிவாய்! ஐந்து ஆண்டுகளாய் உன்னிடம் கேட்பதை தான் இந்த கடிதத்திலும் கேட்கிறேன்.
இந்த வேலையை விட்டு விடு! ஆகாச உயரத்தில் நின்று, அச்சமின்றி குதித்து அந்திரத்தில் தொங்கும் உன் சாகசம், உலகத்தில் பொழுது போக்கான பஞ்கீ ஜம்பிங்காய் (BUNGEE JUMPING) இருக்கலாம். ஆனால், எனக்கோ எமனின் பாசக்கயிற்றை நீ இழுத்து விளையாடுவதுப்போல இருக்கிறது!
உன்னை பிரிந்த காதலுக்காக என்னைப் பிரிய எப்படி மனம் வருகிறது உனக்கு? என்பிள்ளை என்று சொல்லிக் கொள்ள எனக்கு இன்னுமொரு மகன் இருக்கலாம். ஆனால் உன் அன்னை என்பவள், நான் ஒருத்தியல்லவா? எனக்காக வந்துவிடு!
நீ உயிர் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன்,
அம்மா, ஜானவி!
“ என் உயிர்..! அதற்கென்ன ஆகிவிடப்போகிறது?” கசப்பாய் புன்னகைத்தவன், தனது போர்வையை விளக்கிவிட்டு ஆளுயர கண்ணாடியின் முன் நின்று தனது உருவத்தைப் பார்த்தான்.
ஆறடி உயரம்,
அவள் அகராதியில், நெடுமரம்!
ஆளை விழுங்கும் பார்வை,
அவள் அகராதியில், திருட்டு பார்வை!
மாநிற தேகம்,
அவள் அகராதியில், கருப்பட்டி!
மொத்தத்தில் ஆணழகன்,
அவள் அகராதியில், கேடி!
“ச்ச .. எதைப் பத்தி யோசிச்சாலும் அவள் ஞாபகம்தான் வருது!” என்று பற்களைக் கடித்தவன் கோபமாய் சுவரைக் குத்தினான். அடிக்கடி அவன் இப்படி செய்வதின் பலனாய், அவனது கைக்கூட வலிக்காமல் மறுத்துபோயிருந்தது. மீண்டும் தனது தேகத்தைப் பார்த்தான். அங்கங்கு தழும்புகள் தெரிந்தன. அவளை மறக்க எண்ணி அடிக்கடி “பங்கீ ஜம்பிங்” என்ற பெயரில் அந்தரத்தில் தொங்குவது அவன் வழக்கம்.
அதையே வேலையாக செய்தான் சரித்திரன். அவள் சென்றபிறகு அவனுக்கு எதிலும் பிடிப்பு இல்லை. மரணம் என்ற ஒன்று இருக்கிறதா? அதன் உருவம் என்ன? அதை நான் சந்தித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தவன் அரும்பாடு பட்டு இந்த வேலையில் சேர்ந்தான்.
அது ஒரு சுற்றுலா தளம். “பஞ்கீ ஜம்பிங்”க்கு பிரசத்தி பெற்ற அந்த இடத்தில்தான் பணிபுரிந்தான் அவன். அவனுடைய வேலை, உயரத்தில் இருப்பவர்களுக்கு, பாதுகாப்பு உடைகளையும் பெல்ட்களையும் அணிவித்து அவர்களை மேலிருந்து தள்ளி விடுவதுதான். பயத்தில் சிலர் “ஆ”வென கத்தும்போதெல்லாம் அவளின் நினைவுகள் வரும் அவனுக்கு. அவளும் இப்படித்தான்! பல்லியை பார்த்தாலே இதே வேகத்தில் அலறுவாள்.