"என்னங்க இன்று நீங்கள் எங்கேனும் வெளியே போனீங்களா ?”
"நானா வெளியிலா, இல்லை மது”, சிறிது கூட யோசியாமல் கூறியவனை அதிர்ச்சியாக பார்த்தாள் மதுரா.
மதுரா கேட்டவுடன் அவள் கண்களை சந்திப்பதை தவிர்த்தான், எங்கோ பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டு பதிலளித்தான்.
அவ்வளவுதான், மதுரா மனதளவில் உடைந்து போனாள். இதுவரை தான் அனாதை என்ற எண்ணம் அவளுக்கு வரவேயில்லை. ஆனால் இப்போது....!
"நீ இனிமேல் யாருமற்ற அனாதை என்று எண்ணவே கூடாது, உனக்கு நான் இருக்கிறேன், என்று திருமணம் ஆன புதிதில் துரைமுருகன் கூறியிருந்தான்”. அந்த எண்ணம் மதுராவிற்கு வராதவாறு இதுவரையில் நடந்து கொண்டும் இருக்கிறான்.
'ஆனால் இனி தன் நிலைமை என்னவோ!, இத்தனை ஆண்டுகால நேசம் இப்படி கருகியா போகவேண்டும். அவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் சம்பந்தம் ஏதும் இல்லையென்றால் அதை என்னிடம் கூறியிருப்பார் ',என்று எண்ணி எண்ணி கண்ணீர் உகுத்தாள்.
தன் கணவனின் மறுபக்கம் இப்படியிருக்குமென அவள் எண்ணிப் பார்க்கவில்லை. அழுகையில் கரைந்து இரவை கழித்தாள்.
அதன்பின் வந்த நாட்களில் துரைமுருகனுக்கும் மதுராவிற்கும் பேச்சுவார்த்தை குறைந்தது. வேலை பளு காரணமாக துரைமுருகன் அதை கவனிக்க தவறினான், மதுராவிற்கு மேலும் மன வேதனை அதிகரித்தது. ஆனால் மனைவி என்ற கடமையிலிருந்து அவள் விலகவில்லை. அடுத்தநாள் மதுராவின் பிறந்தநாள்.
"மது நாளை உன் பிறந்தநாளிற்கு நாம் வெளியே செல்கிறோம்”, உற்சாகமாக வந்த கணவனை விசித்திரமாகப் பார்த்தாள்.
எட்டு ஆண்டுகளாக தன் பிறந்தநாளிற்கு தனக்கு மிகப் பிடித்த மல்லிகைப் பூவையும், புடவையையும் முதல் நாளே வாங்கி வருவான். ஆனால் இன்று அதுவும் இல்லை. அதை எண்ணும் போது கண்களில் கண்ணீர் சுரந்தது, மறைத்துக் கொண்டாள்.
"என்னாச்சு மது?”
"ஒண்ணுமில்லைங்க போகலாம்". திரும்பி நடந்தாள்.
"பசங்களுக்கும் பள்ளியில் விடுமுறை சொல்லியாச்சு”, சிரித்து கொண்டே கூறினான் துரைமுருகன்.
இவள் தலையாட்டினாள், அவன் புன்னகைத்து கொண்டான்.
அடுத்தநாள் துரைமுருகன் தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய இடத்தைப் பார்த்து பிரமித்துப் போனாள்.
'மதுரா ஆதரவற்ற சிறுவர்கள் இல்லம்'.
பெயர் பலகையை பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் மல்கியது.
"என்னடா பார்க்கிறாய்?, உள்ளே வா”, மனைவியையும் பிள்ளைகளையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
இல்லத்தை அவளை வைத்தே திறந்தான், ஆம் அன்று தான் அந்த இல்லத்தின் திறப்பு விழா.
"என்ன மலைத்துவிட்டாய் மது. உன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியதா?”, புன்னகைத்துக் கொண்டே கேட்ட கணவனை பிரமிப்புடன் பார்த்தாள்.
“.................”.
"உனக்கு இனிய அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று தான் உன்கிட்ட இத்தனை நாளும் சொல்லலை மது”.
மதுராவின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. புன்னகைத்தபடியே அதை துடைத்துவிட்டான் அவள் கணவன்.
"ஓவர்டைம் என்று சொல்லிக் கொண்டு இல்லத்தின் வேலையை தான் பார்த்துக் கொண்டிருந்தேன்”, அடுக்கிக் கொண்டே போனான்.
“.....................”
இப்போ பத்து குழைந்தைகள் மட்டும் இருக்காங்க, அப்புறம் இவங்க தான் உன்னுடன் நம் இல்லத்தை கவனித்துக் கொள்ளப் போகிறார்கள்”, என்று ஒரு பெண்மணியை அறிமுகம் செய்து வைத்தான்.
"இவங்க..............”, அந்தப் பெண் தான் அன்று துரைமுருகனுடன் வண்டியில் சென்றவள்.
"அன்னிக்கு, வெளியே எங்கேயாவது போனீங்களானு கேட்டியே அப்போது இல்லத்தின் வேலையாக இவர்களோடு தான் இருந்தேன். உன்கிட்ட சொன்னா இன்ப அதிர்ச்சி கொடுக்க முடியாதே”! கலகலவென சிரித்தான்.
அங்கே இல்லத்தின் ஓரிடத்தில் நன்கு வளர்ந்த மல்லிகை பந்தலையும் கண்டாள் , துரைமுருகன் அதையும் பராமரிக்கத் தவறவில்லை. மதுராவிற்கு அனைத்தும் விளங்கியது.
தன்னைப் போல் ஆதரவற்றவர்களுக்கு இல்லம் ஆரம்பிக்க வேண்டும் என்பது மதுராவின் நீண்ட நாளைய ஆசை. அதைத்தான் துரைமுருகன் நிறைவேற்றியிருக்கிறான்.
கணவனின் மறுபக்கம் களங்கமில்லாதது என்பதை புரிந்து கொண்டாள் மதுரா. தப்பிற்கு பிராயச்சித்தமாக அங்கேயே அவன் கால்களில் விழுந்தாள்.
"மதூ............”, அவளை தூக்கி ஆசையாய் அணைத்துக் கொண்டான் அவள் ஆருயிர் கணவன் துரைமுருகன்.
This is entry #109 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை – கணவனின் மறுப்பக்கம்
எழுத்தாளர் - நித்யா மணி
{kunena_discuss:1083}