“உங்களுக்கு சிரமமா இல்லைனா நீங்க கொஞ்சம் வெயிட் செய்து என் சிஸ்டரையும் அழைச்சுட்டு வர முடியுமா. சாரி உங்களை தொந்தரவு செய்யறேன்” வருண் கணேஷின் முகத்தைப் பார்த்தப்படியே மெல்ல சொல்லவும் கணேஷின் முகத்தில் ஓர் சந்தோஷம் குடியேறியது.
“இதில் என்ன தயக்கம் வருண். நீங்க கிளம்புங்க. உங்க அம்முவை பத்திரமா கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு” என்று உற்சாகமாக சொல்லவும் சரோஜினி அம்மாவையும் அழைத்துக் கொண்டு வருண் புறப்பட்டான்.
அங்கே அந்த புகைப்படங்களில் சிரித்துக் கொண்டிருந்த வர்ஷினியை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான்.
நேரம் செல்ல வர்ஷினி வரும் சுவடே தெரியவில்லை.
சரோஜினி அம்மா சற்று முன் பாப்பா ரூம் என்று மேல முதல் அறையை கைகாட்டியதை கணேஷ் ராமும் கவனித்தே இருந்தான்.
எதற்கும் மேல சென்று பார்த்து விட வேண்டியது தான் என்று மெதுவாக மாடிப்படிகளில் ஏறினான்.
அதே நேரம் மண்டபத்தை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான் வருண்.
அவன் மொபைல் இசைக்கவே ஸ்பீக்கரில் போட்டு விட்டான்.
“வருண் கிளம்பியாச்சா”
மறுமுனையில் காயத்ரி பேசவும் பின் இருக்கையில் சரோஜினி அம்மா இருந்தபடியால் ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.
எதற்கு ஆங்கிலத்தில் பேசுகிறான் என்று புரியவில்லை என்றாலும் தானும் ஆங்கிலத்திலேயே பேசலானாள்.
“அம்மு கிட்ட குடுங்க”
“அம்மு வரல காயூ”
“வருண் என்ன இது. நான் இப்போவே அங்க கிளம்பி வரேன். நீங்க வீட்டுக்கு திரும்புங்க” காயத்ரி கோபமானாள்.
“காயூ கூல். அம்மு என் கூட தான் வரல. ஆனா வர வேண்டியவங்க கூட சீக்கிரமே வந்திடுவா” உல்லாசமாக விசிலடித்தபடி கூறினான் வருண்.
“என்ன சொல்றீங்க வருண்” காயத்ரி கேள்வி எழுப்பினாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன் நம்ம வீட்டுக்கு யார் வந்தாங்கன்னு கேளு”
“யார் வந்தாங்க”
“கெஸ் பண்ணு”
“டோன்ட் சே வந்தது டாக்டர் கணேஷா”
“டார்லிங் யூ ஆர் ப்ரிலியன்ட்” வருண் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.
தனது அன்பிற்குரியவன் என்றும் இல்லாத திருநாளாய் தன்னை செல்லப் பெயர் கொண்டு பிரியமாய் டார்லிங் என்று அழைத்தது காயத்ரியின் கருத்தை ஈர்க்கவில்லை.
இது நாள் வரை எதையும் சொல்லாமல் தானே உள்ளுக்குள் மருகிக் கொண்டு துயரக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வர்ஷினி வாழ்வில் இனி கரை சேரும் நேரம் வந்துவிட்டதை எண்ணி பேரானந்தம் கொண்டாள்.
வருண் கணேஷ் அங்கே வந்தது அவர்கள் உரையாடல் கணேஷின் முக பாவங்கள் எல்லாவற்றையும் விரிவாக சொல்லிக் கொண்டே வந்தான்.
“வருண் உண்மையை சொல்லணும்னா போன நிமிஷம் வரை எனக்கு இந்த நிச்சயதார்த்தத்தில் ஒரு உண்மையான சந்தோஷமே இல்லை. அம்முவின் ஆசை அப்படின்னு தான் என்னை நான் சமாதனம் செய்து கொண்டேன். ஏன்னா அம்மு ஏதோ கஷ்டத்தில் இருக்க என்னலா ஒரு சந்தோஷத்தை பரிபூரணமாக உணர முடியல. ஆனா இப்போ என் மனசு நிறைஞ்சு இருக்கு. சீக்கிரம் வாங்க வருண்” காயத்ரி சொல்ல சொல்ல வருண் உருகிப் போனான். தன்னவளை எண்ணி பெருமிதம் கொண்டான்.
காயத்ரி மேல் அளவில்லா காதல் இருந்தும் அதை அவன் சொல்லால் செயலால் வெளிக்காட்டியதில்லை. அவனுக்கும் சேர்த்து வர்ஷினி தான் காயத்ரி மீது அன்பை பொழிந்தாள்.
தன் கண்ணின் மணியாக காத்து வந்த தங்கையை இதயத்தில் பொத்தி வைத்து பொக்கிஷமாய் பாதுகாக்க ஒருவன் வந்து விட்டதும் தான் தனது இதயத்தின் ஓசையே கேட்டது வருணுக்கு.
மண்டபம் அடைந்து விட சரோஜினி அம்மாவை இறக்கி விட்டு காரை பார்க் செய்ய செலுத்தினான்.
“என்னாச்சு வருண் ஏன் பேசாம இருக்கீங்க” காயத்ரி அப்போதும் ஆங்கிலத்தில் வினவினாள்.
“காயூ” வருணின் குரல் குழைந்தது.
அதைக் கேட்ட காயத்ரி மொபைலை காதோடு ஒட்டிக் கொண்டாள். அவள் தேகம் சிலிர்ப்பில் சில்லிட்டது.
அந்த அறையில் வாசலுக்கு முதுகை காட்டியவாறு முழு அலங்கராங்களோடு தனியே அமர்ந்திருந்தாள்.
இரு பக்கமும் நிசப்தமாக இருக்கவே தானாக அதை உடைத்தாள்.
“ஒன்ஸ் மோர் வருண்” அவள் குரல் அவளுக்கே கேட்டதா என்று தெரியவில்லை.
“காயூ” இப்போது மறு செவியில் சுடச் சுட அவளது பெயர் ஒலிக்க அவள் இதயம் ஓர் கணம் நின்று பின் தட தடவென வேகமாய் துடித்தது.
இதயம் துடிக்கும்
{kunena_discuss:1109}