தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 19 - லதா சரவணன்
அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தும் தன் காதலை சொல்லாமல் போனதை எண்ணி மனதிற்குள் தன்னையே திட்டிக்கொண்டான் பாண்டி, இனி இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையுமா திகைப்பில் இருந்தவனுக்கு மறுநாள் கல்லூரியில் அவளைக் கண்டவன் அவளின் தனிமையைச் சாதகமாக்கிக் கொண்டு அவளிடம் சென்றான். மாயா
சொல்லு பாண்டி, என்ன விஷயம் ? படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கேட்டாள்.
நத்திங்... நேத்து வந்து பாதியிலேயே போயிட்டே, அதான் மனசுக்கு வருத்தமாயிடுச்சி, கடைசி வரைக்கும் இருப்பேன்னு நினைச்சிருந்தேன்.
கவிதாவை டிராப் பண்ண வேண்டியிருந்ததாலதான் நான் அப்படி போக வேண்டியதாப்போச்சு இல்லைன்னா கடைசி வரை இருந்திருப்பேன்.
இஸிட் இருப்பியா என் கூட கடைசி வரையில்,
அவன் குரலில் தென்பட்ட வித்தியாசமான ஒலியைக் கண்டுகொண்டு நீ பேசறது எனக்கு புரியலை பாண்டி, ஆனா நீ ஏதோ சாதாரணமா மட்டும் பேசலைன்னுத் தோணுது. எதையும் நேரடியா பேசிடு பாண்டி அதுதான் நம்ம இரண்டு பேருக்குமே நல்லது.
எப்படிப் பேசுவது என்று எண்ணிக்கொண்டு இருந்தவனுக்கு, அவளே அந்தப் பேச்சைத் துவங்கியதும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது, இத்தனை சீக்கிரம் அந்த சந்தர்ப்பம் வாய்க்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை, மாயா நான் உன்மேல் என் உயிரையே வைச்சிருக்கிறேன். என்னை ஏமாத்திடாதே, நீ கடைசி வரைக்கும் என் கூடவே இருக்கணுமின்னு நினைக்கிறேன்
சடாரென எழுந்தாள் மாயா, முட்டாள் மாதிரி பேசாதே பாண்டி, நான் காதல் கல்யாணம் என்றெல்லாம் இப்போதைக்கு யோசிப்பதாயில்லை
உறவுகள் மேல எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, தயவு செய்து உன் காதலை என்மேல் வைத்து வேஸ்ட் பண்ணாம வேற இடம் பாரு.
நில்லு மாயா அலட்சியமா சொல்லிட்டு என்கிட்டே இருந்து உன்னாலே விலக முடியாது, நான் உன்னை வெறித்தனமா நேசிக்கிறேன் நீ இல்லாம என்னால வாழ முடியாது நான் செத்துப்போயிடுவேன் மாயா, அவன் உடைந்து அழத் தொடங்கினான்.
இங்கே பாரு பாண்டி நான் கஷ்டப்படுத்தலை, உனக்கு என் மேல ஏற்பட்ட காதல் எனக்கும் என்மேல ஏற்படணும் இல்லையா, எனக்கு அந்த எண்ணமே இல்லைன்னு ஆன பிறகு சும்மா சும்மா என்னையேன் தொல்லை செய்கிறாய் ? ப்ளீஸ்
இல்லை மாயா நீ என்னைக் காதலிச்சியே ஆகணும் சொல்லிட்டேன் என்று கத்தினான் அவளை கையைப்பிடித்து இழுக்க முற்பட பளாரென்று அவன் கன்னத்தைப் பதம் பார்த்தாள் மாயா. இதுதான் உனக்கு மரியாதை ஜாக்கிரதை... என்று எச்சரித்து விட்டு போனாள்.
கல்லூரியில் எல்லா மாணவர்களும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு கூடிவிட்டார்கள். பாண்டிக்கு அவமானமாக இருந்தது, அப்படியானால் தன்னிடம் பேசியது பழகியது எதுவுமே அன்பில்லையா, எனது பிறந்தநாளில் என்னை வாழ்த்தியபோது கூட நான் கோடிட்டு பேசினேனே அப்போது சிரித்தவள் இன்று நேரடியாக சொல்லியதும் இப்படி கோவமாய் பேசிடக் காரணம் என்ன ,
இவன் இருக்கிற இருப்புக்கு மாயா தேவையா ? ஒரு தராதரம் இல்லை, நல்லாத்தான் கொடுத்தாள். இப்படியெல்லாம் சொன்னாத்தான் இதுங்களுக்குத் தோணியிருக்கும். பெண்கள் எல்லாரும் களுக்கென சிரிக்க ஆண்கள் தனக்கொரு ரூட் கிளியராகி விட்டது என்று சந்தோஷமாய் பேசிக்கொண்டு சென்றார்கள்.
அவமானம் பிடுங்கித் தின்றது பாண்டிக்கு நேராக நண்பர்கள் மூவருடன் தங்கியிருந்த அறைக்குச்சென்றான். மண்டைக்குள் அவமான நண்டுகள் குடைந்தன. விஜய் மட்டும் அறையில் இருந்தான். பாண்டியின் இருண்ட முகத்தினைக் கண்டதும் என்னடா என்று விசாரித்தான்.
பாண்டி அழுதபடியே நடந்தவற்றைக் கூறினான். எனக்கு நேத்தே தெரியும்டா நான் எவ்வளவோ சொன்னேன். நீதான் கேட்கலை அவள் திமிர் பிடிச்சவடா, சரி விடு அவளை விட்டு வேற யாரும் இல்லையா. அவ கொடுத்து வைச்சது அவ்வளவுதான் .
அப்படி இலகுவா என்னால எடுத்துக் கொள்ள முடியலை விஜய், என் உயிர் உள்ளவரை நான் அவளை மறக்கலை, மறக்கவும் முடியாது,
சும்மாயிருந்தா இப்படித்தான் இருக்கும் பேசாம படு,, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ என்ற விஜய் நான் ஆஸ்பிட்டல் வரைக்கும் போயிட்டு உனக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிட்டு வர்றேன் என்றான்.
விஜய் வெளியே செல்ல, சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த அதை எடுத்தான் ஒரு விநாடிதான் நான் உன்னை விரும்பலை மாயாவின் குரலும் அவள் அடித்த இடமும் எரிந்தது. தன் வாயில் அந்த பாட்டிலை அப்படியே கவிழ்த்துக் கொண்டான். அடுத்த ஐந்தாவது விநாடி மயங்கிச் சரிந்தான்.