13. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி
மகேனும் ரூபனும் அந்த கயவனின் இருப்பிடத்திற்கு செல்வதற்குமுன் மகேன் தீபனுக்கு அழைத்து அவனுக்கு ஆதியின் ப்ரண்ட் அர்விந்த்தின் மேல் சந்தேகம் இருப்பதாக சொன்னான். முதல் முறை அர்விந்த் வேலை செய்யும் இடத்திற்கு சென்று ஆதியை பற்றி விசாரிக்கையில் அர்விந்த்தின் முகம் அதிர்ச்சியில் சுருங்கியது. அவன் மகேனின் கேள்விகளுக்கு சரியாய் பதிலளிக்கவில்லை.
ஆதியை தெரிந்தவர்களிடம் மட்டும் விசாரித்ததில் பல உண்மைகள் வெளியானது. ஹர்ரிடம் ஆதியின் ரிசைநேஷன் லெட்டரை கொடுத்ததும், ஆதி வீட்டை காலிசெய்து வேறு இடத்திற்கு சென்றதையும் சொன்னது அர்விந்த் தான். இது ஆதியை நன்கு தெரிந்தவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சிலர் அர்விந்த் சொன்னதை நம்பவும் இல்லை! சில நாட்களுக்கு அவர்கள் ஆதியின் நம்பருக்கு அழைக்க, ரிங் மட்டும் செல்ல அழைப்பை எடுக்க யாரும் இன்றி நின்று விட்டது. அதன் பின் ஆதியின் போன் சுவிட்ச் ஆஃப்பிலேயே இருந்திருக்கிறது.
அவர்கள் அர்விந்திடம் கேட்க அவன் போன் நம்பரை மாற்றி விட்டான் எனவும் யாரிடமும் கொடுக்க வேண்டாம் என ஆதி கேட்டுக் கொண்டதாகவும் சொன்னான். ஏன் என கேட்டவர்களுக்கு ஆதி தன்னிடம் எந்த காரணத்தையும் சொல்லவில்லை என முடித்துக்கொண்டான். சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆதியை பற்றி விசாரிக்கையில் ஆதி வீட்டையும் நம்பரையும் மாற்றிவிட்டான். இப்போ தன்னிடம் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றான்.
அவர்களால் நம்ப முடியவில்லை. அன்று குழந்தையை காணவில்லை என ஓடினான். அதன் பின்னர் அவனை யாரும் பார்க்கவில்லை. குழந்தைக்கு என்ன ஆனது அவன் எப்படி இருக்கிறான் என தெரிந்துக்கொள்ள தான் நினைக்கிறோம் என்று சொல்ல அர்விந்த் ஆடி போனான். அப்படி ஏதும் நடக்கவில்லை எனவும், ஆதி மனைவி மற்றும் குழந்தையுடனே வேறு இடத்துக்கு சென்றான் என அடித்து சொன்னான் அர்விந்த். அவர்களுக்கு அர்விந்த் மேல் கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் நாளடைவில் அவர்கள் அப்படியே விட்டு விட்டனர்.
மகேனை கண்டால் அர்விந்த் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுவான். அவனின் முக பாவங்களிலே ஆதியை பற்றி மற்றவர்களிடம் விசாரிப்பது பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. சில நேரம் ஒருவரிடம் வெகு நேரம் பேசினால் அர்விந்த் அங்கு வந்து விடுவான். அப்படியே பேச்சையும் மாற்றி அவர்களை அங்கிருந்து செல்ல வைத்துவிடுவான். அரவிந்தின் எண்ணம் முழுக்க மகேனை மீண்டும் அங்கே வந்து யாரிடமும் ஆதியை பற்றி கேட்க கூடாதென இருந்தது. அதுவே அவனின் மேல் மகேனுக்கு சந்தேகத்தை வளர்த்தது.
அடுத்த சில மணி நேரங்களுக்கு அவர்கள் எல்லாம் சற்று பரபரப்பாக இருந்தனர். யார் என்ன செய்ய வேண்டும், யார் எங்கு செல்கிறார்கள் என வாட்ஸ்அப்பில் செய்திகளை பரிமாறிக்கொண்டனர். அதன் பின்னர் மகேன் தீபனுக்கு அர்விந்த் வேலை செய்யும் அலுவலகத்தின் முகவரியும் அவனின் புகைப்படத்தையும் வாட்ஸ்அப்பில் அனுப்பினான்.
மகேனும் ரூபனும் கலைவாணன் இருக்கும் இடத்தை நோக்கி பயணிக்க, தீபன் அரவிந்தை தேடி அவனின் அலுவகத்தின் வெளியே காத்திருந்தான். தீபனுக்கு அர்விந்த் கிடைப்பானா? ஆட்டம் தொடங்கியது!
கயவன் 1
சற்று ஒதுக்குபுறமான இடத்தில் இருந்தது அந்த வீடு. ஆள் நடமாட்டம் ஏதுமில்லாமலும், அக்கம் பக்கத்தில் வீடுகள் இல்லாமலும் வெறுமையாக காட்சி அளித்தது அவ்விடம். அவர்கள் இருவரும் காரில் அமர்ந்தபடியே அவ்வீட்டை நோட்டம் விட்டனர்.
வெட்டப்படாத புற்கள் புதரைபோல் மண்டிக்கிடந்தது. அதனுள் விஷ பிராணிகள் இருந்தால் கூட ஆச்சரியபட வேண்டியதில்லை. அங்கங்கே குப்பைகூளங்கள், உடைந்து சிதறிய பீர்பாட்டல்கள் கிடந்தன. இதை பார்க்கையில் அந்த வீட்டில் யாரும் குடியிருப்பதாக ரூபனுக்கு தோன்றவில்லை.
அவர்களுக்கு அது கைவிடப்பட்ட வீடு என புரிந்தது. இனி நேரத்தை வீணடிக்காமல் வேறு வழியில்தான் முயற்சி செய்யணும் என எண்ணியவர்கள் தீபனுக்கு அழைத்து அங்கு உள்ள சூழ்நிலையை சொல்லி, அங்கிருந்து கிளம்புகையில் அவர்களில் கண்ணில் பட்டான் ஒரு சிறுவன்! அவனின் கையில் உணவு பொட்டலம். யாருக்கு அவன் உணவு எடுத்து செல்லுகிறான்?
உடனே காரை சாலை ஓரத்தில் நிறுத்தி அவனை நோட்டம் விட்டனர். இவ்விடத்தில் இவனுக்கு என்ன வேலை? அதும் அவ்விடம் அவனுக்கு நன்கு பழக்கப்பட்டது போல தெரிந்தது. அவனின் நடையில் ஒரு துள்ளலும், ஒரு சிறிய பந்தை உதைத்துக்கொண்டு வந்தவன் நேரே அந்த வீட்டிற்கு தான் சென்றான்.
அந்த வீட்டின் கேட்டை திருந்தவன், அவனின் பேண்ட் பாக்கெட்டினுள் உள்ள சாவியை எடுத்துக்கொண்டு கதவை திறந்து வீட்டினுள் சென்றான். இதை கண்ட அவர்கள் சற்று அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அந்த வீட்டில் ஆள் இருக்கிறார்களா? மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அச்சிறுவன் வெளியே வரும்வரை காத்திருந்தனர்.
உள்ளே சென்ற சிறுவன் ஓரிரு நிமிடங்களிலேயே திரும்பி வந்துவிட, மீண்டும் அந்த பந்தை உதைத்துக்கொண்டு சென்றான். இப்போது அவனிடம் அந்த உணவு பொட்டலம் இல்லை! அவன் வருவதை பார்த்து, மகேன் காருக்கு வெளியே காத்திருந்தான். அச்சிறுவன் இவர்களை பார்த்த பயத்தில் பின்வாங்கினான்.