22. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது
அதிகமாக மனமகிழ்வுடன் சிரிப்பது இதயத்தின் ஆயுளை நீட்டிக்கும்
வருண் காயத்ரி திருமணம் முடிந்து சில நாட்கள் ஆகியிருந்த நிலையில் வர்ஷினி ராம் திருமணம் குறித்து ராமச்சந்திரன் வீட்டில் பேசிக் கொண்டிருந்ததை எதேச்சையாக வர்ஷினி கேட்க நேர்ந்தது.
உடனேயே கணேஷ் ராமை தொடர்பு கொண்டாள்
“ராம் எங்க இருக்கீங்க”
“நம்ம ஹாஸ்பிடல்ல தான்டா “
“ நான் வரேன் உங்களோட பேசணும்” என்றவள் அவனது பதிலுக்கு காத்திராமல் கட் செய்து விட்டாள்.
அன்று மாலை திருமணம் குறித்து கலந்து ஆலோசிக்க வர்ஷினி வீட்டிற்கு செல்லலாம் என சுமித்ரா கூறியிருந்தார்
அதைத் தான் வர்ஷினியிடம் சொல்ல வந்தான்.
அதற்குள் அவள் போன் கட் செய்து விட்டதால் நேரிலேயே சொல்லிக் கொள்ளலாம் என அவள் வருகைக்கு காத்திருந்தான்
அன்று பெரிய சர்ஜரி எதுவும் இல்லை ஆதலால் அவனது அறையில் அமர்ந்து ஓர் ஜர்னலை புரட்டிக் கொண்டிருந்தான்.
அவனது போன் சிணுங்க வர்ஷினியாக தான் இருக்கும் என நினைத்து “ சொல்லுடா அர்ஷூ” என்றான்
அவனது பெற்றோர் மற்றும் வர்ஷினிக்கு மட்டுமே அந்த போன் நம்பர் தெரியுமாகையால் அழைப்பு வர்ஷினியிடம் இருந்து தான் என நினைத்திருந்தான்.
“கரம் மசாலா உன் பேச்சுக் கா” எதிர்முனையில் குரல் கேட்கவும் உற்சாகமானான்
“பூரி மசாலா” அவன் குரலில் ஆனந்தம் கொப்புளித்தது.
“என்கிட்ட பேசாத போ” சிணுங்கனாள்.
“நீ என்கிட்ட சொல்லவே இல்ல...நான் அங்க வந்த போது கூட நீ ஒண்ணுமே சொல்லல” ஆதங்கப்பட்டாள்
“அப்படி எல்லாம் இல்ல பூரி. நீ இங்க வந்த போது நானே விடை தெரியாத புதிரில் சிக்கியிருந்தேன். சொல்லியிருந்தா நீ சாமி ஆடிருப்ப... அதான்”
மறுமுனை மௌனமாக இருக்கவே,
“நீ என்னை புரிந்து கொள்ளவில்லை என்றால் வேறு யார் புரிஞ்சுப்பாங்க” என அவன் சொன்னது தான் தாமதம்
“ஆஹா இந்த டயலாக்குகெல்லாம் குறைச்சலில்லை.... அக்காகிட்ட மட்டும் எல்லாம் சொல்லியிருக்க” படபடவென பொரிந்தாள்
வருண் காயத்ரி நிச்சயதன்று தானே அவனது தேவதை அவனிடம் வந்து சேர்ந்தாள்.
அன்று இரவே ஹரிணியிடம் அனைத்தையும் ஒப்பித்து விட்டிருந்தான்.
“மோன் செர்ரி நீயே பூரி மசாலாகிட்ட பக்குவமாய் சொல்லிடு.. பாஸ் கிட்டேயும்” என அவள் தலையில் கட்டி விட்டான்
“போதும்டா பூர்வி அவன் பாவம் “ கணேஷ் ராம் செவிகளில் அந்த கம்பீரமான குரல் ஒலிக்கவும் இருக்கையை விட்டு எழுந்தே விட்டிருந்தான்
“கரம் மசாலா ஸ்டான்ட் அட் ஈஸ்” பூர்வி பார்க்காமலேயே அவன் அட்டென்ஷனில் இருப்பான் என அனுமானித்துக் கேலி செய்தாள்
“பூர்வி” ஹரிணியின் குரல் ஒலிக்கவும் கான்பரன்ஸ் காலில் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்
கதவை லேசாக தட்டியதும் பதில் இல்லாமல் போகவே உள்ளே நுழைந்த வர்ஷினி தான் வந்த அரவம் கூட அறியாமல் யாரிடம் அப்படி சந்தோசமாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறான் என்ற கேள்வியோடு அவனை ஏறிட்டாள்.
“ராம்” அவள் அழைப்பும் அவள் செவிகளை எட்டவில்லை.
வர்ஷினிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவன் அருகில் சென்று ராம் என மீண்டும் அழைக்க மெல்ல திரும்பியவன் , பேசுவதை நிறுத்தாமல் ஒற்றைக் கரம் நீட்டி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அந்த ஓர் செயலே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.
அவன் யாரோடு பேசுகிறான் என்ன பேசுகிறான் எதுவும் அவளுக்கு முக்கியமாக படவில்லை.
“அர்ஷூ வந்திருக்கா...ஏதோ முக்கியமா பேசணும் என்று சொன்னா” அவள் பெயரை அவன் கூற கவனித்தாள்.
பூர்வியுடன் சேர்ந்து ஹரிணியும் அவனை கலாய்க்க
“ செர்ரி யூ டூ... டூ பேட் டார்லிங் “ அவன் சொன்னதும் ஹர்ஷவர்தன் ஒரு உம்ம் போட
“பாஸ் சாரி சாரி” என கணேஷ் ராம் சொல்ல அனைவரும் ஒரு சேர சிரித்தது வர்ஷினிக்கு தெளிவாக கேட்டது.
போனை அணைத்து டேபிள் மீது வைத்தவன் இரு கைகளாலும் அவளை அணைத்துக் கொண்டு “சொல்லுமா” என்றான்
அவன் முகத்தில் முன் எப்போதும் இல்லாத ஓர் பூரண மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
தான் சொல்லப்போகும் விஷயம் அவனது இந்த சந்தோஷத்தைக் கலைத்து விடுமோ என அஞ்சினாள்.
வேறு வழியில்லை சொல்லித்தான் ஆக வேண்டும்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் சொல்ல சொல்ல அவளை அறியாமல் அவள் கண்ணில் நீர் வழிய அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
சாரி ப்ரெண்ட்ஸ் சின்ன அப்டேட்டுக்கு. பொங்கல் வகேஷனுக்கு ஊருக்கு வந்ததால் கொஞ்சம் பிஸி
இதயம் துடிக்கும்
{kunena_discuss:1109}