“அப்புறம் கங்கா.. இன்னொரு முக்கியமான விஷயம், இந்த கல்யாணத்தைப் பத்தி இப்போதைக்கு யாருக்கும் எதுவும் தெரியக் கூடாது.. நம்ம யமுனாவையும் சேர்த்து தான்..”
“யமுனாவுக்கும் தெரியக் கூடாதா? யமுனா இல்லாம என்னோட கல்யாணமா?”
“இங்கப்பாரு பணக்காரங்கன்னாலே, எதிரிங்க நிறையப் பேர் இருப்பாங்க, அந்த பையன் இப்படி போதை பழக்கத்துக்கு ஆளானதும் ஒரு சதி தானாம், அந்த பிள்ளைக்கு சரியாகக் கூடாதுன்னு எதிரிங்க நினைக்கிறாங்களாம், அதான் இங்க கூட்டிக்கிட்டு வந்து ரகசியமா வைத்தியம் பார்க்கிறாங்க, அதான் இந்த கல்யாணமும் இப்போதைக்கு ரகசியமா இருக்கனும்” மேனேஜர் தன்னிடம் சொன்னதை கனகா அப்படியே கங்காவிற்கு கூறினார்.
“ஆனா யமுனா சொன்னா புரிஞ்சிப்பா அத்தை..”
“இங்கப்பாரு என்ன இருந்தாலும் அவ சின்னப் பொண்ணு.. கூடப்படிக்கிற பசங்கக்கிட்ட ஏதாவது உளரி வச்சான்னா, அதுவும் இல்லாம அக்காவை கட்டிக்கிற மாப்பிள்ளைக்கு போதை பழக்கம் இருக்குன்னு யமுனாவுக்கு தெரிய வந்தா, தன்னால தான் அக்கா இப்படி ஒரு முடிவெடுத்திருக்கான்னு அவ யோசிக்க மாட்டாளா? இப்போ அவளுக்கு ஆபரேஷன் செய்ற சமயத்துல அவளை இப்படியெல்லாம் யோசிக்க விடலாமா? அவளுக்கு நடக்க போறது ஹார்ட் ஆபரேஷனாச்சே!” கனகா சொல்வதும் கங்காவிற்கு சரியென்று தான் பட்டது.
“ஆனால் அத்தை அப்போ யமுனா என்னோட இருக்க மாட்டாளா? இன்னும் ரெண்டு நாளில் அவளுக்கு பரிட்சை ஆரம்பிக்க போகுது, அப்புறம் ஆபரேஷன்க்கு ஏற்பாடு நடக்கும், அந்த சமயம் அவளை யார் பார்த்துப்பாங்க..”
“ஏன் நான் பார்த்துக்க மாட்டேனா? அதான் பணம் வேற கிடைக்கப் போகுதே! நல்ல ஒஸ்தியான வைத்தியமா பார்க்கச் சொல்லலாம், உன்னைப்பத்தி கேட்டா, நீ வெளியூருக்கு வேலைக்கு போயிருக்கேன்னு சொல்லுவோம்” என்றார். கங்காவிற்கு ஏதோ மனதிற்கு தப்பாகவே பட்டது. இருந்தும் யமுனாவை மனதில் கொண்டு கனகா சொன்னதெற்கெல்லாம் தலையாட்டினாள்.
கங்கா சம்மதித்து விட்டதாக கனகா மேனேஜரிடம் சொன்னதும், அவர்கள் இருவருக்குமான திருமண ஏற்பாடு நடந்தது. அவர்கள் எஸ்டேட் முடிவிலிருக்கும் அந்த சிறிய அம்மன் கோவிலில் திருமணம் நடக்க அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தார். அண்ணாமலை, மேனேஜர், வாணி, கனகா இந்த நால்வர் மட்டுமே மணமக்களோடு இருந்தனர். எஸ்டேட் பங்களாவில் வேலை செய்யும் மற்றவர்களிடமும் இந்த திருமணத்தைப் பற்றி வெளியில் சொல்லக் கூடாதென்று மிரட்டி வைத்திருந்தார் அண்ணாமலை. எஸ்டேட்டில் வேலை செய்பவர்களுக்கும் அன்று விடுமுறை அளித்திருந்தார்.
நாடகம் என்றாலும் கனகாவிற்கோ கங்காவிற்கோ சந்தேகம் வரக்கூடாதென்று முறைப்படி திருமணத்தை நடத்த புரோகிதரை வரவைத்திருந்தார் அவர்.. இருந்தும் நால்வர் மட்டும் இருக்கவே, கங்கா கனகாவை கேள்வியோடு பார்க்க, “அதான் சொன்னேனே, இப்போதைக்கு இந்த கல்யாணம் யாருக்கும் தெரியக் கூடாது.. அதான் வீட்ல இருக்கவங்களும் வரல, மாப்பிள்ளை குணமானதும் மெட்ராஸ்ல பெரிய பங்ஷன் வைப்பாங்களாம்” என்று கனகாவை ஏமாற்ற மேனேஜர் சொன்னதை அவர் கங்காவிடம் கூறினார்.
மணமேடையில் உட்கார்ந்திருந்த கங்கா ஒருமுறை அருகில் உட்கார்ந்திருந்த துஷ்யந்தை தலை நிமிர்ந்து பார்த்தாள். 25 வயதுக்குண்டான தோற்றம், கூட உடல்நலம் சரியில்லாததால் மெலிந்திருந்தான். கங்காவின் பக்கம் அவன் திரும்பி பார்க்கவே இல்லை. புரோகிதர் சொன்னதை சிரத்தையாக செய்துக் கொண்டிருந்தான். அப்போது கொடுத்திருந்த போதை மருந்தின் விளைவும், ஒழுங்காக சொன்னதை செய்தால், திரும்ப மருந்து கொடுப்போம் என்று அவனுக்கு ஆசைக் காட்டியதாலும், அவன் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அமர்ந்திருந்தான்.
கனகாவிடமும் கங்காவிடமும் அவனுக்கு இருந்த போதை பழக்கத்தை பற்றி மட்டுமே சொல்லியிருந்தனர். அவனின் மனரீதியான பாதிப்பு எதுவும் கங்காவிற்கு தெரியாது. இப்போது அவனுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டிருப்பது கூட அவளுக்கு தெரியாது.
மது அருந்தும் பழக்கமே அவளுக்கு பிடிக்காத ஒன்று, இதில் போதை மருந்துக்கு பழகியவர்களை அவள் அறவே வெறுப்பவள். இருந்தும் அவனுக்கு அந்த பழக்கம் சதியால் ஏற்பட்டது என்பது ஒன்று மட்டுமே கங்காவிற்கு ஆறுதலான விஷயம்.
இதுநாள் வரை குழப்பமாக இருந்தாலும், இவனுடன் தான் வாழ்க்கை என்பது இறைவன் தீர்மானித்தது. அதில் எத்தனை பிரச்சனைகளும் சிக்கல்களும் வந்தாலும், அவனோடு வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற முடிவோடு தான் அவள் மணமேடையில் அமர்ந்தாள். ஆனால் பிற்காலத்தில் அவளே தான் அவனோடு இந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவெடுக்கப் போகிறாள். என்ன தான் அதற்கான சதி வலையை அண்ணாமலையும் மேனேஜரும் விரித்து வைத்திருந்தாலும், அவன் தனக்கு வேண்டாம் என்ற முடிவு அவளுடையது தான், பின்னாளில் எடுக்கப் போகும் அம்முடிவை பற்றி தெரியாமல், இப்போது துஷ்யந்த் கட்டிய தாலியை கண்களை மூடி கங்கா மனதார ஏற்றுக் கொண்டாள்.
தடைப் படாத என் சுவாசத்திற்காக...
என் ஜீவன் காத்திருக்கிறது...!!
{kunena_discuss:1078}