19. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்
“அப்பா, நா உங்க பொண்ணு பா. எனக்கு நீங்கதான் பா முக்கியம். எனக்காவது, காதலாவது” என்று அவரை அனைத்துக் கொண்டு அழுதாள்.
தன் மனதில் அழகாய் வளர்ந்திருந்த காதல் மரத்தை, ஒரு நொடியில் வெட்டிச் சாய்த்தாள் அனு. இதயத்தில் அவள் வெட்டிய குருதி, கண்களில் கண்ணீராய் ஊற்றெடுத்தது.
தன் மகள் ஏன் அழுகிறாள் என்று காரணம் தெரியாமல், அவளைச் சமாதானம் செய்தார் ராஜ சேகர்.
இருவரையும் காணவில்லையே என்று தேடிவந்த பார்வதியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு அப்படி நின்று கண் கலங்கினார்.
ராஜ சேகர் அனுவை சமாதானம் செய்ய, அவளோ கண்களில் வழிந்த நீரைத் துடைத்தாலே தவிர அவள் மனம் இன்னும் அதிகமாய் வலித்தது, இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
அவர்கள் இருவரும் எழுவதைப் பார்த்த பார்வதி, ஒன்று நடக்காததைப் போல் உள்ளே சென்றுவிட்டார்.
அனுவின் கண்ணீர் நின்றுவிட்டாலும் அவளின் விசும்பல் சத்தம் கேட்க, ராஜ சேகர் அவளிடம் “என்னடா இது சின்ன குழந்தை மாதிரி. எல்லாம் என்னை சொல்லனும். கல்யாண பொண்ணு கலகலப்பா இருக்க வேண்டிய உன்ன, என் சோகத்தை எல்லாம் சொல்லி அழவெச்சுட்டேன் பாரு” என்று தன்னை தானே திட்டிக் கொண்டார்.
ராஜ சேகரும், அவரின் தோளில் சாய்ந்தவாறே அனுவும் உள்ளே வர, எதையும் கவனிக்காதது போல் பார்வதி இருவரையும் பார்த்து “வாங்கச் சாப்பிடலாம்” என்றார்.
உடனே ராஜ சேகர் “எனக்குப் பசி இல்ல பார்வதி” என்று தன் மனைவியை பார்த்துக் கூறிவிட்டு, அனுவைப் பார்த்து “நீ போய் சாப்பிடு டா” என்றார்.
“இல்ல பா எனக்கும் பசிக்கல” என்று கூறிவிட்டு அங்கு அதற்கு மேல் நிற்காமல் மாடிப் படிகளை ஏறினாள்.
ஏனோ அவளைத் தனிமையில் விடுவது சரி என்று பட, இருவருமே அவளைத் தடுக்கவில்லை.
தன் அறைக்குள் வந்தவள், அறையின் கதவை தாழிட்டு விட்டு, அப்படியே படுக்கையில் சாய்ந்து அழத் தொடங்கினாள். அவளுக்கு உலகமே இருண்டு விட்டதாய் தோன்றியது. காதலின் வலி அவள் இதயத்தை அறுத்து துண்டுகளாக்கிக் கொண்டிருந்தது.
வாய் விட்டுக் கதறி அழ வேண்டும் என்று தோன்றினாலும் அழ முடியாத நிலை. தாய் தந்தைக்கு கேட்டுவிட்டால் அதற்கு விளக்கம் கொடுக்க கூடிய நிலையிலா இருக்கிறாள்.
“அமைதியா போயிட்டு இருந்த என் வாழ்க்கையில் ஏன் டா வந்த? வந்து கொஞ்ச நாள் சிரிக்க வெச்சு, இப்போ வாழ்க்கை ஃபுல்லா என்னை அழ வெச்சிட்டியேடா. மனசுல உன்ன நெனச்சிக்கிட்டு நான் எப்படி திபக் கூட வாழ்வேன், அது அவருக்கும் நான் செய்கிற துரோகம் இல்லையா.” என்று தன் மனதில் விஷ்ணுவைத் திட்டி தீர்த்தாள்.
தனக்குத் தானே எவ்வளவு சமாதானம் செய்தும் அவள் மனம் அதைக் கேட்கவில்லை. அழுவதைத் தவிர வேரென்ன செய்ய முடியும் அவளால்.
இங்கு விஷ்ணுவோ “அனு தவறாக நினைத்திருப்பாலோ” என்று கவலையிலே உறக்கம் வாராமல் அல்லாடிக் கொண்டிருந்தான்.
இவ்வாராக இருவரும் எப்போது உறங்கினார்கள் என்று தெரியாமல் உறங்கிப் போயினர்.
மறுநாள் அனுவை எப்படிப் பார்ப்பது என்று குழப்பத்தாலும், பயத்தாலும் விஷ்ணு அவளைப் பார்க்காமல் காலையில் வேளைக்குச் சென்றுவிட்டான்.
காலையில் விடிந்தும் அனு எழுந்து வராததால் பார்வதியே அவள் அறைக்குச் சென்று பார்த்தார். பார்த்தவர் பதறியே போய் விட்டார்.
அனு நடுங்கியவரே படுத்திருந்தாள்.அருகில் சென்று அனுவை தொட்டுப் பார்க்க, அவள் உடலோ அனலாய் கொதித்தது. முந்தைய நாள் மழையில் நனைந்தது, இரவெல்லாம் அழுதது என இரண்டும் சேர்ந்து அவளுக்குக் காய்ச்சல் வந்திருந்தது.
பார்வதி, ராஜ சேகருக்கு தெரிவித்து விட்டு அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று வந்தார்.
அனு மிகவும் வீக் ஆகி இருந்தாள் மனதளவிலும் உடல் அளவிலும்.
அங்கு விஷ்ணுவிற்கோ அன்று முழுவதும் வேளையே ஓடவில்லை. ஒவ்வொரு நொடியும் தன்னை தானே மனதில் கடிந்து கொண்டிருந்தான். மாலை வேளை முடிந்ததும் அனு வீட்டிற்குப் போகலாமா என்று பலமாக யோசித்தவன், போகவில்லை என்றால் தவறாகி விடும், சென்று மன்னிப்பாவது கேட்டுவிட வேண்டும் என்று தயக்கத்துடனே அனுவின் வீட்டிற்கு வந்தான்.
உள்ளே நுழைந்தவன் அனுவின் நிலைமையைப் பார்த்து பதறிவிட்டான். அனு ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு, கண்களை முடியவாரு சோபாவில் சாய்ந்திருந்தாள். முகமெல்லாம் அப்படி ஒரு சோர்வு.
“அனு என்ன ஆச்சி” என்று அருகில் அமர்ந்தவாறே கேட்டான் விஷ்ணு.
அவன் குறள் கேட்டு கண்களை திறந்தவளுக்கு, அவனை அனைத்துக் கொண்டு அழ வேண்டும் என்று தோன்றியது. அவளின் இத்தனை துன்பத்திற்கும் காரணமும் அவன்தான், அவளின் இந்த நிலைமைக்கு மருந்தும் அவன்தான். ஆனாலும் அதைச் செய்ய முடியாத நிலைமையில் இருந்தாள் அவள்.