வசந்தும் ஜெஸிகாவும் வரவேற்பறையில் உள்ள சோபாவில் அமர்ந்தனர். வசந்த், அமேலியா வரைந்த நோட்டுப் புத்தகத்தை புரட்டி ஓவியங்களை பார்த்துக்கொண்டிருந்தான். கடைசி மூன்று ஓவியங்கள் விடுபட்டிருந்தன.
"அமேலியாவா வரைஞ்சது?" ஜெஸிகா கேட்டாள்.
"ஆமா"
"இன்னும் அவ மேல காதல்னு சுத்திட்டு இருக்கியா?"
"எல்லாம் தான் முடிஞ்சு போச்சே"
"என்ன?"
"ஜான் கிட்ட பேசினியா?"
"அவன்கிட்ட நான் எதுக்கு பேசணும்?"
"ஜான்கூட எப்போவாவது தனிமையில இருந்திருக்கியா?"
ஜெஸிகா வசந்தை முறைத்தாள்.
"தப்பான எண்ணத்துல கேக்கல, சொல்லு"
"அவன் வீட்டில ஷூட்டிங் நடக்குற நேரத்துல இருந்திருக்கேன்"
"அந்த நேரத்துல அவன் உனக்கு முத்தம் கொடுக்க முயற்சி செஞ்சிருக்கானா?"
ஜெஸிகா வசந்தின் கன்னத்தில் பளாரென அறைந்தாள். "ஆ.." வென வசந்த் அலறினான்.
"இப்படி ஒண்ணு வச்சிருப்பேன். ஆனா ஜான் அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டான். இந்த மாதிரி விஷயத்துல அவன் ஜென்டில்மேன்"
"இதை வாய்ல சொல்லிருக்கலாமே?"
"சரி, ஏன் இதையெல்லாம் கேக்குற? அதை சொல்லு"
"நேத்து நானும் அமேலியாவும் தனிமையில இருந்தோம்"
"முத்தம் கொடுக்க முயற்சி செஞ்சியா?"
"கொடுத்துட்டேன்"
"அடப்பாவி! அமேலியா என்ன பண்ணா?"
"அழுதுகிட்டே போயிட்டா"
"இது தான் ஆம்பளைங்க குணமே. உரிமையோடு நடக்குறேன்னு கண்ட காரியங்களை பண்ணுவாங்க"
"அவ என் காதலை ஏத்துக்கிட்டான்னு நினைச்சு உணர்ச்சி வசப்பட்டுட்டேன்" என்ற வசந்த், "கடைசி மூணு ஓவியங்களை வரைஞ்சிருந்தான்னா நல்லாயிருக்கும்" என்றான்.
"அதுக்கு உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கணும்"
ஆபீஸ் வாயிலில் ஆடம்பரமான கார் ஒன்று வந்து கம்பீரமாக நின்றது. அதிலிருந்து நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் இறங்கி உள்ளே வந்தார். வேலை செய்பவர்கள் அவருக்கு மரியாதை கொடுத்து வரவேற்றனர்.
"இவர் தான் ஃப்ராங்க்ளின் போல இருக்கு" என்று ஜெஸிகா வசந்தின் காதில் கிசுகிசுத்தாள்.
சிறிது நேரத்தில் வரவேற்பறையில் இருந்த ஆண் வசந்திடம் வந்து, "மிஸ்டர் ஃப்ராங்க்ளின் உங்களுக்காக காத்துட்டு இருக்கார்" என்றான்.
"ஓ தேங்க யூ" என்ற வசந்த், ஜெஸிகாவுடன் லிப்டில் ஏறி இரண்டாவது மாடியை அடைந்து மிஸ்டர் ஃப்ராங்க்ளின் இருந்த அறையை அடைந்தான்.
ஆபிஸ் ரூம் போல் இல்லாமல் அபார்ட்மெண்ட் வீடு போல காட்சி தந்தது. அமர்வதற்கு சோபாக்கள், பெரிய திரை கொண்ட டெலிவிஷன், ஓய்வெடுக்க ஏத்தாற்போல் சிறிய படுக்கை என ஆடம்பரங்கள் நிறைந்த சொர்க்கமாக அவ்விடம் காட்சி தந்தது. 'இது அவர் ஓய்வெடுப்பதற்கான இடம் போலும்' என வசந்த் எண்ணிக் கொண்டான்.
ஃப்ராங்க்ளின் தனது முன்வழுக்கையை கைக்குட்டையால் துடைத்தபடி கண்ணாடி திரை வழியே வெளியில் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார்
"சார்" என்றான் வசந்த்.
ஃப்ராங்க்ளின் திரும்பிப் பார்த்தார். "உட்காருங்க வசந்த்".
வசந்தும் ஜெஸிகாவும் அமர்ந்தனர்.
"நேரா விஷயத்துக்கு வருவோம். பெரும்பாலும் நான் புதியவர்களை நம்புறது இல்லை. அதுக்காக அவங்க திறமையில்லாதவங்கன்னு அர்த்தமில்லை. அவங்களுக்கு போதிய அனுபவம் இருக்கிறதில்லை"
"வாய்ப்பு கிடைச்சா தான சார் அனுபவம் வரும்" என்றான் வசந்த்.
"உண்மை தான். கூடவே நஷ்டமும் வரும். விஷ்வா உங்களை ரொம்ப சிபாரிசு செய்தார். அதான் உங்களுக்கு அப்பாய்ன்ட்மென்ட் கொடுத்தேன்"
'நடப்பது ஒரு கண்துடைப்பு சம்பவம் தான்' என்பது போல் வசந்த் ஜெஸிகாவை நோக்கினான். தனக்கு வாய்ப்பு கிடைக்குமென்று அவன் நம்பவில்லை.
"உங்க கதையை சொல்லுங்க வசந்த்"
தன்னிடமிருந்த நோட்டுப் புத்தகத்தை நீட்டினான் வசந்த்.
அதைப் பெற்றுக் கொண்ட ஃப்ராங்க்ளின், "என்ன இது?"
"என் கதையோட ஓவியங்கள் சார்"
"சரி, கதையை சொல்லுங்க"