தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 08 - சித்ரா. வெ
இதோ அதோ என்று பாலா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி நடைபெறும் நாளும் வந்தது. இன்று மாலை நேரம் நடக்கவிருக்கும் பார்ட்டியை சிலர் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். சிலர் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. பார்ட்டியை எதிர்பார்த்தவர்கள் என்றால், அது மதுரிமா, அஜய், சுஜனா தான்,
மீண்டும் விபாகரனை சந்திக்க போகும் ஆவலில் மதுரிமா இருந்தாள். இன்று பார்ட்டியில் என்ன ஆடை அணிவது என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தாள். அன்று அவன் வீட்டில் விபாவோடு அதிகம் பேச முடியவில்லை, அதனால் இன்று அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு அவனிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைத்தாள். நடிப்பதற்கு கூட இத்தனை ஒத்திகை பார்த்திருக்க மாட்டாள், ஆனால் விபாவோடு என்ன பேச வேண்டும் என்று நிறையவே ஒத்திகை பார்த்தாள். மாலை எப்போது வரும் என்று அவ்வப்போது கடிகாரத்தை பார்த்தே நேரத்தை கடத்தினாள்.
அதேபோல் அன்று விமான நிலையத்தில் பார்த்தபிறகு அஜயும் சுஜனாவும் மீண்டும் பேசிக் கொள்ளவோ, இல்லை சந்தித்துக் கொள்ளவோ முயற்சிக்கவில்லை.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அன்று வீட்டிற்கு போனதும் குறுஞ்ச்செய்தி அனுப்பியதோடு சரி, அதன்பின் அஜயின் அழைப்பை சுஜனா ஏற்கவில்லை. அதேபோல் அவளும் அவனிடம் பேசவும் இல்லை. விமான நிலையத்தில் நன்றாக தானே பேசினாள். பின் என்ன காரணம் என்று தெரியவில்லை, அவனது அழைப்பை அவள் தவிர்க்கிறாள். மனம் முழுதும் நேசம் இருந்தும், அவளுக்கு திருமணம் முடிவாகியிருக்கும் காரணத்தால், எந்தவிதத்திலும் தன் மனதில் உள்ளதை அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அஜய் அவளை நட்பு ரீதியில் தானே அணுகினான். இருந்தும் சுஜனா ஏன் இப்படி செய்கிறாள்? என்பது அவனுக்கு புரியவில்லை.
அதற்கு எதிர்மாறாக தன் மனம் அஜயின் பின் போகும் உண்மையை அறிந்ததால், அவனைவிட்டு தள்ளி நிற்க வேண்டும் என்று தான் சுஜனா அவனை தவிர்த்து வந்தாள். ஆனால் அவனை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று அவளுக்கு ஆசையாகவும் இருந்தது. தன் மனதை மறைத்துக் கொண்டு அஜயிடம் நட்புடன் பேசினால் என்ன என்று தோன்றினாலும், தன்னை மீறி தன் மனம் அவனை அதிகம் தேடும் என்ற பயத்தால் அவனிடம் அலைபேசியில் கூட பேசவில்லை, இந்த நேரத்தில் தான் பாலா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி பற்றி தெரிய வந்தது. கட்டாயம் இதில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று தன் தந்தை சொல்வார். அதனால் எப்படியும் அஜயை நேரில் பார்த்து தான் ஆக வேண்டும் என்பதை அவள் அறிவாள்.
எனவே இந்த பார்ட்டியில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால், இருவரும் இன்றைய மாலை நேரத்தை அதிகம் எதிர்பார்த்தனர்.
விபாகரனுக்கு இப்படி ஒரு பார்ட்டி ஏற்பாடு நடப்பதில் விருப்பம் இல்லை என்றாலும், பாலாவும் அஜயும் ஏற்பாடு செய்ததால் அதில் கலந்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால் சரி என்று அமைதியாகிவிட்டான்.
சாத்விக்கிற்கு பாலா அழைத்ததால் பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று இருந்தாலும் சுஜனாவின் வருங்கால கணவன் என்ற முறையில் அங்கு செல்ல விருப்பமே இல்லை. ஆனால் சாத்விக்கின் தந்தை வசந்தனுக்கோ சுஜனாவின் தந்தை அழைத்ததால் இந்த பார்ட்டிக்கு தானும் சாத்விக்கும் செல்ல வேண்டும் என்று இருந்தாலும் அது விபாகரனுடைய வியாபார சம்பந்தமான பார்ட்டி என்பதால் போக வேண்டுமா? என்று யோசித்தார்.
சாத்விக்கிற்கு வேண்டுமென்றால் விபாகரனுக்கும் யாதவிக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கும் என்பது தெரியாமல் இருக்கலாம், ஆனால் வசந்தனுக்கு யாதவியோடு விபாகரனுக்கு ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது என்பது தெரியும். தன் முன்னே நின்று யாதவி எங்கே என்று கேட்டவன் ஆயிற்றே,
அப்போது சாமானிய மனிதனாக இருந்தான். இப்போதோ, இந்தியாவை தாண்டி பேர் வாங்கிய தொழிலதிபர். அந்த பார்ட்டிக்கு சென்றால், விபாகரன் தன்னை அவமானப்படுத்துவானா? என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஆனாலும் அங்கு சென்று தானே ஆக வேண்டும்,
பெரிய பெரிய தொழிலதிபர்கள் கலந்துக் கொள்ளும் பார்ட்டி என்றாலும், தன் மகன் இப்போதைய முன்னணி நடிகன் என்பதாலும், அவர் ஒரு தயாரிப்பாளர் என்பதாலும் பார்ட்டி நடக்கும் இடத்தில் தங்கள் இருவருக்கும் எந்தவித கௌரவ குறைச்சலும் ஆகக் கூடாது என்று நினைத்தார். அதனால் அவர் பார்ட்டி ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பே பன்னீரை அனுப்பி சாத்விக்கிற்கு உண்டான மரியாதைக்கு அங்கு ஏதாவது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்து வரச் சொன்னார்.
“நான் என்ன தலைமை தாங்கவா போறேன், இது வியாபார சம்பந்தமான பார்ட்டி, இதுக்கு போகவே எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் பாலா இன்வைட் பண்ணதால சும்மா அட்டண்ட் பண்ணிட்டு வந்துடுவேன், இதுக்கு எதுக்கு இப்படியெல்லாம் செஞ்சுக்கிட்டு..” என்று சாத்விக் கூறினான். ஆனாலும் அவன் சொல்வதை வசந்தன் கேட்பவரா? பன்னீரை அங்கு அனுப்பி வைத்தார்.