(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 09 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

பார்ட்டிக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர். தங்கள் வீட்டில் நடப்பதால் பாலா குடும்பத்தினர் தயாராகி வந்து விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். மதுரிமாவின் பெற்றோர்களும் அதில் அடக்கம்,

அஜயும் பாலாவுக்கு உதவியாக இருக்க முன்னமே வந்துவிட்டிருந்தான். அஜயை பார்த்த புவனாவும்,  இந்த நேரம் தேவியும் இங்கிருந்தால், அவளுக்கு அவனை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று நினைத்தார்.

ஆம் இப்போது பார்ட்டியில் யாதவி கலந்துக் கொள்ளவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தவளை புவனா எவ்வளவு தேற்றியும் அவள் அழுகையை நிறுத்துவதாக இல்லை, அழுது அழுது முகம் வீங்கி போயிருந்தது. எப்போதோ இறந்து போன அன்னைக்காக யாதவி இன்று ஏன் இப்படி அழுகிறாள் என்று புவனாவிற்கு புரியவில்லை, அவளது அன்னையை ஞாபகப்படுத்தும் படி எதுவோ நடந்திருக்கிறது, ஆனால் என்ன நடந்தது என்று யாதவி எதுவும் சொல்லவில்லை,

இந்த நேரத்தில் புவனா யாதவியை வற்புறுத்தவுமில்லை, இப்படி வீங்கிய முகத்தோடு அவள் எப்படி பார்ட்டியில் கலந்துக் கொள்ள முடியும்? அதனால் அவளை உறங்கும்படி சொல்லிவிட்டு அவர் வெளியே வந்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இந்த பார்ட்டியில் கலந்துக் கொள்ள வேண்டாம் என்று யாதவி நினைத்தது போலயே, எந்தவித திட்டமும் தீட்டாமல் அவள் பார்ட்டியில் கலந்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இப்போதைக்கு சாத்விக், விபாகரனை விட, அவளின் தந்தை பன்னீரை சந்திப்பதை தான் அவள் விரும்பவில்லை, அவர் மட்டும் சரியாக இருந்திருந்தால் தன் வாழ்க்கையில் இத்தனையும் நடந்திருக்குமா? என்ற கேள்வி அவளுக்கு பெரிதாக தெரிந்தது.

அவள் நினைத்தது போல் பன்னீரும் பூபதியை பார்த்ததால்  அங்கேயே இருந்துக் கொண்டு அலைபேசி முலமாக வசந்தனுக்கு இங்கு ஏற்பாடெல்லாம் முறையாக நடக்கிறது என்று தகவல் அளித்துவிட்டார். பூபதியும் பன்னீரை நன்றாக உபசரித்து தன் அருகிலேயே நிறுத்திக் கொண்டார்.

பார்ட்டிக்கு தயாராகி வந்த பாலாவும்  மதுரிமாவும் தேவியை பற்றிக் கேட்ட போது, “அவளுக்கு உடம்பு சரியில்லை பாலா அதனால் அவ ரூம்ல ரெஸ்ட் எடுக்குறா..” என்று புவனா கூறினார்.

தன் அன்னையின் பதிலில் சந்தேகம்  வந்து பாலா ரூபினியை பார்க்க, அவள் அவன் பார்வையை புரிந்துக் கொண்டு பதில் சொல்வதற்குள்,

புவனாவே முந்திக் கொண்டு, “நிஜமாகவே அவளுக்கு உடம்பு சரியில்லை பாலா.. நான்  இவ்வளவு நேரம் அவக்கூட இருந்துட்டு தான் வரேன்..” என்றுக் கூறினார்.

விபாகரனை சந்திக்கும் உற்சாகத்தில் தேவிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது தனக்கு தெரியவில்லையே என்று மதுரிமாவிற்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

“என்ன பெரியம்மா தேவிக்கு உடம்புக்கு என்ன? காலையில் நல்லா தானே இருந்தா.. இப்போ என்ன ஆச்சு அவளுக்கு..” என்று சொல்லியப்படியே அவள் தேவி அறைக்கு போக முயற்சிக்க,

“அதானே திடிர்னு உடம்புக்கு என்ன வந்துச்சு..” என்றப்படி பாலாவும் அவளுடன் போக முயற்சித்தான்.

இருவரும் இப்போது தேவியை பார்க்க உள்ளே போனால் கண்டிப்பாக அவள் அழுததை கண்டுபிடித்துவிடுவார்கள். என்ன நடந்தது என்றும் கேட்பார்கள், அவள் எப்படியும் சொல்ல போவதில்லை,  இதில் அவள் இன்னும் அழவும் செய்யலாம், சிறிது நேரம் அவள் தனியாக இருந்தால், அவளே சமாதானமாகிவிடுவாள். அதனால் இருவரும் போக வேண்டாம் என்று நினைத்த புவனா,

“அவளை தூங்க சொல்லிட்டு வந்தேன் பாலா, இந்நேரம் அவ தூங்கியிருப்பா, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தாலே போதும் அவ சரியாகிடுவா.. இப்போ அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்..” என்றார்.

விபாகரனை பார்க்கும் ஆசை இருந்தாலும், இப்போது தேவியின் உடல்நலம் முதன்மையாக தெரிய, “நான் தேவி கூட கொஞ்சம் நேரம் இருக்கேன்.. நீங்கல்லாம் பார்ட்டில கலந்துக்கங்க..” என்று மதுரிமா கூறினாள்.

“அவ தூங்கும் போது நீ கூட இருந்து என்ன செய்ய போற மதும்மா, ஏதாச்சும்னா நம்ம போனுக்கு அவ பேசுவா, இப்போ நாம பார்ட்டி முடிஞ்சதும் வந்து அவளை பார்த்துக்கலாம் வா..” என்று புவனா சொல்லவும்,

“அம்மா சொல்றதும் சரி தான் மது, அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நாம பார்ட்டி முடிஞ்சு வந்து பார்த்துக்கலாம்..” என்று பாலாவும் கூறினான். பின் மதுரிமாவும் சரி என்று ஒத்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.