தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்
அதிரதன் அன்று மாலை வீடு திரும்பும்போது அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன்தான் நுழைந்தான். வீட்டின் சூழல் அமைதியாக இருந்தது. அவனுடைய செல்லத் தங்கை மகிமாவை காணவில்லை. வலது பக்க அம்மாவின் அறை வாசலில் எப்போதும் அமர்ந்து இருக்கும் அப்பாவையும் காணவில்லை.
அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போனதில் இருந்து அப்பா அம்மாவின் அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்கிறார். அம்மா ஓய்வெடுக்கும் சமயத்தில் அறையின் வெளியே இருக்கும் சோபாவில் அமர்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருப்பார். அங்கே அவர் இல்லை. அப்படியெனில் இப்போது அவர் எங்கே?
வீட்டின் வெளியே இருக்கும் தோட்டத்தில் இருப்பார்களோ? அங்கே சென்றான். தொலைதூரப் பார்வையிலேயே அவர்கள் அங்கு இருப்பது தெரிந்தது. அவர்களுடன் கௌதமும் இருந்தான். அனைவர் முகத்திலும் சிரிப்பு இருந்தது. என்ன விசயம்?
அதற்குள் அவனை பார்த்து விட்ட அப்பா கையசைத்து,
“ரத்தன் இங்கே வா” வாய் கொள்ளா சிரிப்புடன் அழைத்தார். சிரிப்பின் காரணம் தெரிந்து கொள்ளும் ஆவலில் அவன் விரைந்தான்.
“ம்… என்ன விசேசம்னு கௌதம்ட்ட கேளு?”
“என்னாச்சு கௌதம்?”
“அது…” அவன் புன்சிரிப்புடன் தயங்கிட,
”அண்ணா நீ மாமாவாகப் போற” என்று மகிமா கத்தினாள்.
“இந்த பொண்ண பாரு. இப்படியா சொல்லுவாங்க? உன் ஆளு வெட்கப்பட்டு நிக்கறான்… நீ இப்படி கத்துறீயேம்மா!”
“அட்வைஸ் போதும்ணா.. கங்கிராட்ஸ் சொல்லுங்க”
“சரி… சரி… வாழ்த்துக்கள் கௌதம். ஐம் ஹாப்பி!”
உண்மையிலேயே சந்தோசமான விசயம்தான். மகிமாவிற்கும் கௌதமிற்கும் திருமணம் நடந்து நான்கு வருடங்களாகி விட்டன. ‘எப்போது குழந்தை எப்போது குழந்தை?’ என்று ஏங்கி ஏங்கி தவித்திருந்தனர். இப்போது நல்ல செய்தி வந்து விட்டது.
ஆனால் அதிரதன் முழு மனதுடன் சிரிக்கும் முன்பே….
“எல்லாம் அதிதி அண்ணி வந்த நேரம்தான்” என்றாள்.
இதற்கும் அதிதிதான் காரணமா? அவனுக்கு நடந்து கொண்டிருக்கும் சோகத்திற்கு அவள்தான் காரணம். அவளிடம் அவன் என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறான்? இப்போது அவளை புகழ்ந்து கொண்டிருக்கிறார்களே? கோபத்தை மறைத்துக் கொண்டு