தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 09 - சாகம்பரி குமார்
விடிந்தும் விடியாத அதிகாலை நேரம்… அதிரதனுக்கு விழிப்பு வந்து விட்டது. உண்மையை சொல்லப் போனால் அங்கிருந்த பறவைகள் அவனை விழிக்க வைத்து விட்டன…. சில கூக்கூ என்று இசையாக பாடின… சில நம்பிக்கையுடன் டிவிட்… டிவிட் என்று ஒலியெழுப்பின… கீச் கீச் என்று பசியுடன் சில கத்தின. எதுவானால் என்ன… அத்தனையும் சேர்ந்து ஒரு புதிய இசை ஆல்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன.
அதை ரசித்துக் கொண்டே எழுந்தவன் முன் விடியலில் உதித்த வெள்ளி என அதிதி புன்சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.
“குட் மார்னிங்” கரகரப்புடன் சொன்னான். அவள் பதிலுக்கு சிரித்தாள்.
“குட்மார்னிங் சொல்லணும் அதிதி..”
,“இன்னிக்கு இந்த காட்டு வாழ்க்கையை நீங்கள் என்ஜாய் செய்வதை பார்த்து விட்டு நாளையிலிருந்து குட்மார்னிங் சொல்கிறேன்.”
“அவ்வளவு உஷார்….! நீ குட்மார்னிங் சொல்லி அது பேட் மார்னிங் ஆகிவிட்டால் உன்னுடைய அருள் வாக்கு… குறள் வாக்கு எல்லாம் டேமேஜ் ஆகிவிடும்னு பயம். அப்படித்தானே”
“அட… நீங்க இங்கே புது ஆள். அதனால கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கறேன்.”
“போம்மா… எருமைகிட்டேயே எஸ்கேப் ஆகிட்டேன்… இன்னும் என்ன இருக்கு?”
“அதெப்படி நமக்கு இப்பவே தெரியும். விடிஞ்சிடுச்சு… நம்ம நாளை தொடங்கலாம்”
“என்ன செய்யனும்?”
“முதல்ல பல்லு விளக்கணும். வாங்க… நேத்து நாம ஒரு ஓடைக்கு போணோம்ல… அதோட மெயின் ஆற்றுக்கு போய் குளிச்சிட்டு வரலாம். அப்புறம் சாப்பாட்டு ப்ளான் போடலாம்.”
“யூ மீன்… சில் தண்ணி குளியலா? ஐ ஹோப் ஜாலியா இருக்கும். லெட்ஸ் கோ”
அவன் ஆர்வமாக பரணை விட்டு இறங்கினான். கையில் சிறிய குடத்துடன் நின்ற அதிதி, அவனுடன் நடந்தாள்.
அதிரதன் ஒரு எதிர்பார்ப்புடன் நடந்தான். அந்த ஆறு எப்படி இருக்கும்? கரையோரத்து மரங்கள்.. வழுவழுப்பான பாறைகள்… குட்டியா ஒரு அருவி… சே… சே அருவி இங்கே எப்படி வரும்?. அது மலைக்கு அருகில் இருந்தால்தான் வரும்…!
அந்த சூழலை ரசிக்க மனதை தயார் செய்து கொண்டிருந்தான். கொஞ்சம் நீச்சல் தெரியும்…. சுத்தமான ஆற்று நீரில் குளியல் போடலாம்… மூலிகை வாசம்கூட அதில் இருக்கலாம்… இப்படித்தான் நினைத்தான்.ஆனால், அவன் அதிதிபற்றியே நினைக்கவில்லை..
“ரதன்… இந்த குச்சியை உடைத்து தர்றீங்களா?” என்ற குரல் அவனை நினைவுலகத்திற்கு கொண்டு வந்தது.