தொடர்கதை - பிரியமானவளே - 03 - அமுதினி
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
மதியம் உணவு முடிந்ததும் பாட்டி உறங்க செல்ல, சிறிது நேரம் அவருக்கு உதவியாக அன்று பார்க்க வேண்டிய கணக்குகளை எல்லாம் தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைத்த தமிழ்செல்வி, அதை எல்லாம் அங்கிருந்த டேபிளில் வைத்து விட்டு மெல்ல வெளியே வந்தாள். விசாலம் பாட்டியின் தோட்டம் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். சென்னையின் வெயிலே தெரியாத அளவுக்கு அவரின் தோட்டத்தில் மா, வேம்பு, தென்னை என எல்லாமே இருக்கும். பாட்டி இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். அவரின் கிராமத்தில் உள்ள பல ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தை செய்கிறார். அதில் வரும் லாபத்தில் பெரும்பாலும் தன்னுடைய கிராம விவசாயிகளுக்கு கொடுப்பவர் ஒரு பங்கை மட்டுமே தான் எடுத்து கொண்டார். அதனாலேயே அவர் மேல் தமிழ்செல்விக்கு மரியாதை கூடி இருந்தது.அவரது இயற்கை விவசாயம் வீட்டு தோட்டத்திலும் எதிரொலித்தது தமிழ்செல்விக்கு பிடித்திருந்தது.
கையில் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு வேப்பமரத்தின் அடியில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். படித்து கொண்டிருந்தவளுக்கு அந்த இதமான வேப்பமர காற்று மதிய வேளையில் உறங்கும் வழக்கமில்லாத அவளையும் அறியாமல் உறக்கத்தை வரவழைத்தது.
"ஹ்ம்ம் இப்படி நல்லா ஜாலியா தூங்க தான் என் பாட்டி உன்னை வேலைக்கு வெச்சிருப்பாங்க போல" திடீரென கேட்ட குரலில் அரண்டு எழுந்த தமிழ்செல்வியின் கையில் இருந்த புத்தகம் நழுவி கீழே விழ, அங்கு நின்றிருந்த ராமை பார்த்தவளுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அவள் அவனை எதிர்பார்த்திருக்கவும் இல்லை. வேலை செய்ய வந்த இடத்தில் உறங்கியது தவறு தானே என அவளுக்கும் தோன்ற அமைதியாக நின்றவளை அவன் அணிந்திருந்த அந்த கூலரின் வழியே இரண்டு நிமிடம் பார்த்தவன், "ஆமாம் அன்னைக்கு ஷாப்பிங் மால்ல என்னை பார்த்ததும் ஏன் ஓடி போயி ஒளிஞ்சுக்கிட்ட?" அவனை அன்று பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. அவன் மறந்திருப்பான் என்று எண்ணியவளுக்கு அவள் மறைந்து நின்றதையும் அவன் பார்த்திருக்கிறான் என்பது ஆச்சர்யம் ஆனது.
அவள் எதுவும் பேசாமல் இருக்க, "என்ன கேட்டாலும் பதில் பேசாம இருக்கறது எனக்கு பிடிக்காது" என்று அவன் குரல் சத்தமில்லாமல் கர்ஜிக்க, "இ...இல்லை சார்...நீங்க ஏதோ பெர்சனல் ஒர்க்குக்காக வந்திருந்திங்க...உங்க கூட உங்க கேர்ள் பிரென்ட் இருந்தாங்க...அதான்" அவனின் கர்ஜிப்பில் வாய்க்கு வந்ததை உளறியவள் எதற்கு இப்படி ஒரு பதிலை சொன்னாள் என மனதில் நொந்து கொண்டாள்.