தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - Prologue - பிந்து வினோத்
“வீடு வந்திருச்சு சுவாதி,” சொல்லி விட்டு ரியர் வியூ மிரரில் பின் சீட்டில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் விஷாகன்.
ஏதோ யோசனையில் இருந்தவள், அவன் சொன்னதை கேட்டு மெல்லியதாக அதிர்ந்து அதே கண்ணாடியில் பார்த்தாள்...
அவன் அவளை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை போலும்... அவனின் கண்களை கண்ணாடியில் நேரடியாக சந்தித்ததில் கூட அவளின் முகத்தில் மாற்றம்...
மெது மெதுவாய் வெட்கம் அவளின் முகத்தில் தோன்றுவதை விஷாகன் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, கண்களை தழைத்துக் கொண்டாள் சுவாதி.
ஆனாலும் விஷாகன் அவளின் பிம்பத்தை விட்டு உடனே கண்களை அகற்றவில்லை....
அவனால் பார்வையை திருப்பவும் முடியவில்லை. அவள் கழுத்தில் மின்னிய புத்தம் புது தாலி அவனுக்கு அவளிடம் இருக்கும் புது உரிமையை பறை சாற்றியது.
நேற்று காலை அவனிடம் உனக்கு இன்று கல்யாணம் நடக்க போகிறது என்று சொல்லி இருந்தால் கூட சிரித்திருப்பான்...
ஆனால் ஏதேதோ நடந்து விட்டது... இப்போது அவள் அவனின் மனைவி....
வீட்டினுள் அடிக்க காத்திருக்கும் புயலை பற்றிய சிந்தனை கூட இல்லாமல் அவளையே பார்த்திருந்தான் விஷாகன்....
அவனின் மனம் முழுக்க அவளின் மீதான காதல் மட்டுமே நிறைந்திருந்தது...!
****************