“அவ சொல்றது வடிக்கட்டின பொய்!”
“எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?”
“ஏன்னா நானே கண்ணால பார்த்தேன். அவளுக்கும் அந்த சேகரனுக்கும் நடுவே தப்பான உறவு இருந்துச்சு. அந்த கன்றாவியை நானே நேருல பார்த்தேன்!”
சவீதா சொன்னதைக் கேட்டு சத்யா அதிர்ந்துப் போனாள். ஆனால் சக்தி எந்த மாற்றமும் இல்லாமல் கூலாக இருந்தாள்!
“இதை நீங்க போலீஸ் கிட்ட சொல்லலையா?” என அதே அமைதியுடனே விசாரித்தாள் சக்தி.
“சொன்னேன்ங்க சக்தி! அதை எல்லாம் என் வாயாலேயே சொல்ல வேண்டியதா இருந்துச்சு. என்ன செய்ய, எல்லாம் தலை விதி! அப்படி சொல்லியும் ஒரு பிரயோஜனமும் இல்லையே. அவ இன்னும் இங்கேயே தானே இருக்கா? நானும் எவ்வளவோ சொல்லிப் பார்க்குறேன், அசையவே மாட்டேங்குறா, அவ்வளவு பிடிவாதம். இல்ல இல்ல, நீ என்னை என்ன செய்ய முடியும்ங்குற தெனாவெட்டு.”
சவீதா பதில் சொன்ன பாங்கு அவளுக்கு அஹ்ல்யாவை சுத்தமாக பிடிக்காது என்பதை தெளிவாக காட்டியது. அதை நினைவில் குறிப்பெடுத்துக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்டாள் சக்தி.
“இவ்வளவு உறுதியா உங்களை மாதிரி ஒருத்தங்க சொல்லும் போது எப்படி நம்பாம இருக்க முடியும்? எனக்கு ஆச்சர்யமா இருக்கு! அப்படி என்ன நீங்க அன்னைக்குப் பார்த்தீங்க? எங்க கிட்டேயும் சொல்லலாம்னா சொல்லுங்க.” தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருப்பதாக காட்டிக் கொள்ளாமல், சவீதாவிற்கு உதவ விரும்பும் தோரணையில் கேட்டாள் சக்தி.
அவள் எதிர்பார்த்ததைப் போலவே சவீதா தயங்காமல் பதில் அளித்தாள்.