தொடக்கத்தில் சவீதாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த சத்யா, அஹல்யா தவறானவள் என்று சவீதா அடித்து சொன்னது முதல் அமைதியாக இருப்பதை சக்தி புரிந்துக் கொண்டாள்.
‘உன் மனசு ரொம்ப சாஃப்ட்டா இருக்கே சத்யா!’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
“நீங்க பார்த்ததை வச்சு தான் அந்த சேகரன் இறந்த உடனே அதுக்கும் அஹல்யாக்கும் சம்மந்தம் இருக்குன்னு போலீஸ் கிட்ட சொன்னீங்களா?” என சக்தியே சவீதாவிடம் கேட்டாள்.
“வேற என்ன நினைக்குறதுன்னு சொல்லுங்க. அவன் இறந்ததா நியூஸ்ல சொன்ன டைம் நடுராத்திரி. நான் இவங்களை ஜோடியா நைட்ல பார்த்ததும் அதே நேரம். அந்த சேகரன் ஊரெல்லாம் அஹல்யா என் ஆளு ஆளுன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தான். ஏன், என் கிட்டேயே நேரா வந்து சொல்லி இருக்கான். அது மாதிரி அவன் செய்துட்டு இருந்தது அவளுக்குப் பிடிக்கலையா இருக்கும். சொல்லி பார்த்திருப்பா, கேட்கலைன்னு ஒரே போடா போட்டு முடிச்சிருப்பா! எப்படியோ அவன் போயிட்டான், இவளும் இந்த தெருவை விட்டுப் போய் தொலைஞ்சா போதும்!
அவ நான் இப்போ திருந்திட்டேன்னு சொல்லி இருந்தா கூட நான் அவளை மறந்திருப்பேன். ஆனால் அவ நான் நல்லவ, எனக்கும் அந்த சேகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவன் சாவுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை, இல்லைன்னு கூசாம சொல்றப்போ தான் எரிச்சலா வருது. அவளை இந்த வீட்டை விட்டு காலி செய்ய வைக்கனும். இது நல்ல மாதிரியான மக்கள் வாழுற இடம். அவளை மாதிரியானவங்களுக்கு எல்லாம் இது இடமில்லை. அந்த டாக்டர் மட்டும் அவளுக்கு ரெகமென்ட் செய்து இந்த டீச்சர் வேலையை வாங்கிக் கொடுக்காம இருந்திருந்தா எப்போவோ இங்கே இருந்துப் போயிருப்பா.”
“அஹல்யாவோட வேலை ரெக்கமெண்டேஷன்ல கிடைச்சதா? அவ்வளவு பெரிய ஸ்கூல்ல இப்படி ரெக்கமெண்டேஷன்ல வேலைக்கு எடுக்குறாங்களா?” சக்திக்கு அஹல்யா வேலை செய்யும் பள்ளிக்கூடத்தை பற்றி ஒன்றும் தெரியாது. சத்யா அவளுடைய மகள் அங்கே படிக்கிறாள் என்று சொன்னதை வைத்த யூகத்தில் கேட்டாள்.