தொடர்கதை - பூவா? தலையா? - 02 - சசிரேகா
மறுநாள் காலை 8.45 மணிக்கு ஷார்ப்பாக கல்லூரி முன் நின்றாள் கண்ணகி, அவளை ஸ்கூட்டியில் ட்ராப் செய்தாள் மாதவி
வழக்கம் போல கண்ணகி புடவையிலும் மாதவி மாடர்ன் உடையிலும் இருந்தாள், புடவையில் இருந்தமையால் கண்ணகியை கடந்து சென்ற மாணவர்கள் மரியாதையுடனும் மாடர்ன் உடையில் இருந்த காரணத்தால் மாதவியை சைட் அடித்து சிரித்தபடியே சென்றார்கள். அதைக்கண்ட மாதவிக்கும் சிரிப்பாக இருந்தது, கண்ணகியோ எதையும் காணாமல் கல்லூரியின் அழகைக்கண்டாள்.
”என்னாச்சி கண்ணகி அப்படி ஆச்சர்யமா பார்க்கற”
”இப்பதான் இந்த காலேஜை முதல்முறையா பார்க்கறேன் இதை கட்டி எப்படியும் 30 வருஷத்துக்கும் மேல ஆயிருக்கும் பரவாயில்லை நல்லாதான் மெயின்டெயின் பண்றாங்க காலேஜ் நல்லாதான் இருக்கு இல்லை”
”அது நல்லாயிருந்தா உன்னை ஏன் தேடி வந்து கூப்பிடனும் வில்லங்கமே உள்ளதான் இருக்குப் போல”
”வில்லங்கமா”
”ஆமாம் நான் தாளாளரை சொல்றேன்” என்றாள் சிரிப்புடன்
”சரி சரி நீ கிளம்பு”
”ஈவ்னிங் நீயே வந்துடுவியா”
”ம் சரி நானே வந்துடறேன்”
”ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு சொல்லு”