தொடர்கதை - சின்ன மருமகள் - 04 - சசிரேகா
குபேரனும் வேணியும் கூட வேங்கையனின் பாடலால் கவரப்பட்டார்கள். அதைவிட வீரசிங்கம் தன் மகனின் பாடலைக் கேட்டபடி கோபத்துடன் வந்தவர்
”என்ன இங்க பாட்டுகூத்தெல்லாம் வீடா இது இல்லை வேற எதுவோவா டேய் வேங்கையா என்னடா இது” என சத்தம் போட அவனோ அதிர்ந்து ஒரு ஓரமாக நிற்க ஜானகியோ மஹதியை பார்க்க உடனே வேணியோ மங்களத்திடம் சென்றார்
”அண்ணி பாருங்க உங்க சின்ன மருமகளை நான் கூட்டிட்டு வந்துட்டேன், உங்களுக்கு இப்ப சந்தோஷமா” என கேட்டு வைக்க மங்களம் திருதிருவென விழித்தார்
”சின்ன மருமகளா” என உளற வேங்கையனோ நொந்துப் போனான், கண்களால் சைகை செய்தான் அதுகூட அவருக்கு புரியவில்லை மெதுவாக அவரிடம் சென்று
”அம்மா நேத்து ராத்திரி உன்கிட்ட இன்னிக்கு நடக்கப் போற நாடகத்தைப் பத்தி சொன்னேனே மறந்துட்டியா”
என சொல்ல உடனே புரிந்துக் கொண்டு சட்டென மஹதியிடம் சென்று
”ஆமாமாம் சின்ன மருமகளே வாம்மா வா, வலது கால் எடுத்து வைச்சி வீட்டுக்குள்ள வாம்மா” என அழைக்க மஹதியோ சிரிப்புடன் தலையாட்டியபடியே வலது கால் எடுத்து வைக்க அதைத் முயல தடுத்தார் குபேரன்
”பொறு பொறு முதல் முதல்ல வீட்டுக்குள்ள நுழையற, உனக்கு ஆரத்தி எடுக்க வேணாமா” என சொல்ல உடனே மங்களம் ஆரத்தி தட்டு எடுக்கச் சென்றார்.
ஜானகிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவளோ மஹதியை விசித்திரமாகப் பார்த்தாள். வீரசிங்கத்திற்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அதிகரிக்க அவர் குபேரனிடம்
”யார் இந்தப் பொண்ணு, எதுக்காக இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க” என கேட்க குபேரனுக்கு வேர்த்துக் கொட்டியது.