தொடர்கதை - திருமதி அகத்தியன் - 01 - சசிரேகா
”வரவர காலமே கெட்டுப்போச்சி” என டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருந்த ஒருவன் பேசவும் அருகில் இருந்தவன் ஆர்வமிகுதியில் உடனே அவன் பக்கத்தில் அமர்ந்து
”அப்படி என்ன கெட்டுப்போச்சி”
”மேலவீதி பக்கம் வர்றதுக்கே அஞ்சற ஆளுங்க எல்லாம் இப்போ நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு திமிரா நடந்து வர்றத பாரு” என வெறுப்பாகச் சொல்ல அந்த டீக்கடையில் அமர்ந்திருந்த அனைவருமே அக்கம் பக்கம் பார்த்துவிட்டு கடுப்பானார்கள்
”சரியா சொன்னீங்கண்ணா இவங்க எல்லாம் நம்ம தெருவுக்குள்ள வந்ததால தெரு களங்கமாயிடுச்சி”
”அதுக்கு என்ன செய்ய முடியும் புதுசா கார்மெண்ட்ஸ் திறந்தாச்சில்ல, அங்க வேலை செய்ய கண்டவங்கள்லாம் போறதும் வர்றதுமா இருக்காங்க சே மேலவீதியே நாறிடுச்சிப்பா” என சத்தமாக ஒருவன் பேச அந்த வழியே சென்ற கீழவீதி ஆட்களுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
வேலைக்கு செல்வதை விடுத்து டீக்கடையை பார்த்தபடி
”நாங்களும் மனுஷங்கதான், எங்களுக்கும் எல்லா இடத்திலயும் உரிமையிருக்கு, யார் வரனும் யார் வரக்கூடாதுன்னு சொல்ற அதிகாரம் இங்க யாருக்குமே கிடையாது” என கொதித்து பேச டீக்கடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் கோபம் வந்து சட்டென சண்டைக்கு தயாரானார்கள். இரு கோஷ்டிக்கும் பயங்கர வாக்குவாதம் முடிவில் கைகலப்பில் முடிந்தது. இரு பக்கமும் அடிதடி மோதல் என அந்த இடமே கலவரபூமியாக மாறிய நிலையில் அந்த நிலைமையை சரியாக்கும் விதமாக ஒரு அம்பாசிடர் வேகமாக வந்து நின்றது.
அந்த வண்டியைக் கண்டதும் ஆசிரியரைக் கண்ட மாணவர்கள் போல சண்டை போட்ட மக்கள் சட்டென அமைதியாக கப்சிப்பென வாயை பொத்தி மரியாதையாக கைகட்டி நின்றார்கள். அப்படி நிற்கும் போதே மேலவீதி சார்ந்த பக்கம் கிழக்குபக்கமும் கீழவீதி சார்ந்த மக்கள் மேற்கு பக்கமும் பிரிந்து நிற்க காருக்குள் இருந்தபடியே இதைக் கண்ட டிரைவரோ