தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 03 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“முருகா கடைக்கு போயிருக்கான்!” மிருதுளாவின் குரல் உள்ளறையில் இருந்து ஒலித்தது.
“மிருதுளா, சார் பாவம் ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கார். சாதம் இல்லைனா தோசை சூடா போட்டுக் கொடுக்குறீயா?” வெற்றி மனைவியிடம் கேட்டான்.
“சரிங்க... எத்தனை தோசை???”
வெற்றி அந்த புதியவனை கேள்வியாய் பார்த்தான்.
“ஒரு அஞ்சு தோசை கொடுங்க,” என்றான் அவன்!
“அஞ்சு தோசைம்மா...” உள்ளே பார்த்து குரல் கொடுத்து விட்டு, புதியவனிடம், “நீங்க உட்காருங்க சார், ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் ஆகும். ரொம்ப பசியோட இருக்க மாதிரி இருக்கு, வேற ஏதாவது சாப்பிடுறீங்களா?” என வினவினான் வெற்றி.
“லஸ்ஸி மாதிரி ஏதாவது கிடைக்குமா?”
“மாதிரி என்ன லஸ்ஸியே கிடைக்கும். நீங்க உட்காருங்க நான் எடுத்து வந்து தர சொல்றேன்.”
அந்த புதியவன் ஒரு நாற்காலியில் அமர, வெற்றி அவனுக்கு லஸ்ஸி செய்துக் கொடுக்க மீண்டும் உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.
🌼🌸❀✿🌷
மிருதுளா மும்முரமாக தோசை வார்த்துக் கொண்டிருந்தாள்.
“தினமும் இவளை சாப்பிட விடாமல் இப்படி வேலை கொடுக்குறதே இவனுக்கு வாடிக்கையா போச்சு... இதுல லஸ்ஸி வேற செய்யணுமாம்...” என புலம்பினாள் ராஜம்மாள்.
“நீங்க உட்காருங்க அம்மா, நான் செஞ்சு எடுத்து போய் கொடுக்குறேன்,” என்றாள் நிலா.