தொடர்கதை - பூவா? தலையா? - 09 - சசிரேகா
எப்போது மயக்கம் தெளிந்தது என கண்ணகிக்கு தெரியவில்லை, அவள் இன்னும் தரையில்தான் படுத்திருந்தாள், மயங்கிய பெண்ணை காப்பாற்றும் எண்ணம் கூட இல்லாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தான் கோவலன், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்தே அவள் மயக்கம் தெளிந்து எழுந்தாள், சுற்றி முற்றி பார்த்தாள் கடிகாரத்தில் மணியைக்கண்டு திடுக்கிட்டாள்
”ஒன்றரை மணி நேரமாச்சி அதுவரைக்கும் இப்படியா கிடந்தேன்” என தனக்குதானே சொல்லிக் கொண்டு அடுத்த நொடி அதிர்ச்சியுடன் கோவலனை தேடினாள், அவனோ ஒரு மூலையில் கையில் நாணயத்தை வைத்துக் கொண்டு கோபமாக இருப்பதைக்கண்டதும் சட்டென எழுந்து அவனிடம் சென்றாள்.
”நீங்க சொன்னது பொய்யா உண்மையா” என கேட்க அவனே அவளை ஏற இறங்கப் பார்த்து
”நீ இன்னும் சாகலையா” என கேட்டானே ஒரு கேள்வி அதில் அவள் துடித்துப் போனாள்
”நான் சாகனும்னு ஆசைப்படறீங்களா“
“ஆமாம் என் வாழ்க்கையை நீ அணுஅணுவா சாகடிக்கறதுக்கு பதில் ஒரேடியா நான் சாகனும் இல்லை நீ சாகனும்”
”புது வாழ்க்கை வாழ வந்த இடத்தில இப்படி சாவை பத்தி பேசறீங்களே இது உங்களுக்கே அநியாயமா தெரியலையா”
”எனக்கு நடந்த கொடுமைக்கு யாரு நியாயம் வழங்கறது”
”உங்களுக்கு கொடுமை நடந்ததா உண்மையை சொல்லனும்னா அப்பா அம்மா இல்லாம ஒரு சின்ன பொண்ணு எவ்ளோ கஷ்டப்பட்டாள்ன்னு தெரியுமா உங்களுக்கு”
”தெரியாது தெரிஞ்சிக்கவும் எனக்கு விருப்பம் இல்லை, எனக்கு என் வாழ்க்கைதான் முக்கியம்”