தொடர்கதை - சின்ன மருமகள் - 12 - சசிரேகா
வீடே களையிழந்துவிட்டது, ஆளுக்கொருவர் தங்கள் அறைகளில் முடங்கியிருந்தார்கள், வீரசிங்கம் தன் மனைவி மங்களத்துடன் அறையில்
”உங்க புள்ளை இப்படி செய்வான்னு நான் நினைச்சேப் பார்க்கலைங்க” என மங்களம் கோபம் கொள்ள
”நான் என்னத்த கண்டேன் இப்படி நடக்கும்னு, பாவி மக, இப்ப போய் மனம் திருந்தி வந்தாளே, சின்ன மருமகள் வர்றதுக்கு முன்னாடி அவள் மனம் திருந்தியிருந்தா எவ்ளோ நல்லாயிருந்திருக்கும், இப்போ சின்ன மருமகள் முகத்தில நான் எப்படி விழிக்கறதுன்னு தெரியலை, அவளோட ஊருக்கே போய் பொண்ணு கேட்டு கையோடு அவங்களை கூட்டிட்டு வந்த நேரத்தில இப்படியா நடக்கனும்”
”ஜானகி மூர்த்தியோட உண்மையான முகத்தை தெரிஞ்சிக்கிட்டு அவனை விட்டு விரட்டினதை நினைச்சி சந்தோஷப்படறதா இல்லை, சின்ன மருமகள் இருக்கறப்ப ஜானகி மறுபடியும் என் புள்ளை வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சதை நினைச்சி வருத்தப்படறதான்னே தெரியலை, இதுல பாவமே சின்ன மருமகள்தான்”
”வேங்கையன் எப்படி இப்படியொரு முடிவு எடுத்தான் என்னை கேட்காம எதையும் செய்ய மாட்டான், ஆனா ஜானகி விசயத்தில அவனா அவன் விருப்பத்துக்கு முடிவு எடுக்கறான், அப்படி அவன் எடுக்கற முடிவு எல்லாமே தப்பாதான் போய் முடியுது, அதை ஏன் அவன் புரிஞ்சிக்கலை”
”அவனுக்கு ஜானகியை பிடிக்கும்ங்க அவள் மேல இன்னுமும் கூட ஆசை வைச்சிருக்கான் போல இருக்கு, நாமதான் தப்பா புரிஞ்சிக்கிட்டு சின்ன மருமகளை அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்னு ஆசைப்பட்டோம், அவன் ஆசை நிறைவேறிடுச்சி ஆனா நம்ம ஆசை நிராசை ஆயிடுச்சி, இனி என்ன செய்றதுங்க”
”எனக்கு ஒண்ணும் விளங்கலை மங்களம், சின்ன மருமகளோட அப்பா அம்மா முகத்தில எப்படி விழிக்கறதுன்னு தெரியலை, ஊரை விட்டு இந்த ஊருக்கு வந்து அவங்க மான மரியாதையை இழந்துட்டாங்க, என்ன சொல்லி அவங்களை சமாளிக்கறதுன்னு தெரியலை