தொடர்கதை - பூவா? தலையா? - 11 - சசிரேகா
இருக்கும் பிரச்சனை போதாதென்று சிலம்பரசன் வேறு கல்லூரியில் பிரச்சனைகளை தந்தான், அதைக்கண்டு கண்ணகி கலங்கிப் போனாள். அவனை எதிர்க்க அவளால் இயலவில்லை, அவனோ இவளை மிரட்டினான், கோவலன் மாதவி விசயத்தை வெளிப்படுத்துவதாக சொல்லியே அவளை அடக்கினான், அவள் அடங்கி நடக்க நடக்க அவன் திமிரேறி நடந்தான்
ஒழுங்காக இருந்த கல்லூரியை பழைய படி ஒழுக்கமில்லாமல் ஆக்கினான், மாணவர்களுக்கு வியப்பாக இருந்தது ஆனாலும் ஜாலியாக இருக்க சொன்னால் அவர்களுக்கு என்ன கசக்கவா போகிறது, ஆசிரியர்களில் சிலம்புவுக்கு சலாம் வைத்தவர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை வேலையை விட்டு எடுத்தான், அதற்கு பதிலாக ஏற்கனவே முன்பு அங்கு வேலை செய்த ஆசிரியர்களை நியமித்தான், அவனது பொறுப்பில் கல்லூரி கெட்டழிந்துக் கொண்டிருந்தது, நடப்பதை கண்டும் தடுக்க இயலாமல் தவித்து கல்லூரிக்கு செல்லவே விருப்பமில்லாமல் வீட்டிலேயே முடங்கினாள் கண்ணகி.
உதயமூர்த்திக்கும் கல்லூரியில் நடக்கும் விசயம் வந்த வண்ணம் இருந்தது, கண்ணகி பாவம் கோவலன் வேறு இல்லை, இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு சிலம்பு இப்படி அட்டூழியம் செய்கிறானே என பொங்கி அவனை அடக்க சென்றார், ஆனால் அவனோ அவரையே மதிக்காமல் விரட்டியடித்தான், அதில் அவருக்கு அவமானமாகிப் போய் கண்ணகியிடம் வந்து குறை பாட அவளோ கைவிரித்தாள், பாவம் அவள் நிலைமையே மோசமாக இருந்தபடியால் நேராக கோவலனிடமே சென்றார்.
3 மாதம் கழித்து வந்த உதயமூர்த்தியைக்கண்ட கோவலன் சிரிப்புடன் வரவேற்றான்
”வாங்க அங்கிள் வாங்க வாங்க எப்படியிருக்கீங்க நல்லாயிருக்கீங்களா” என கேட்க உதயமூர்த்தியோ கோபம் கொள்ளாமல் வருத்தமாக பேசினார்
”கோவலன் கலைக்கல்லூரி முன்ன போலவே மாறிடுச்சி, இன்னும் மோசமா ஆயிடுச்சி, மாணவர்கள்கிட்ட இருந்த பொறுப்புணர்ச்சி ஒழுக்கம் எல்லாம் போயிடுச்சி, கல்லூரியோட பெயர் புகழ் நாசமாயிடுச்சி, மக்கள் மத்தியில கல்லூரி மேல கெட்ட எண்ணமே வந்துடுச்சி, இப்படியே போனா கல்வித்துறை அதிகாரிகள் வந்து கல்லூரியை இழுத்து மூடிடுவாங்க” என சொல்ல கோவலன் திகைத்தான்