தொடர்கதை - திருமதி அகத்தியன் - 04 - சசிரேகா
மருத்துவர் சங்கமேஸ்வரனை பரிசோதித்து பார்த்துவிட்டு பொன்முடியிடம்
”ஒரு பிரச்சனையும் இல்லைங்க, திடீர்ன்னு ஏற்பட்ட அதிர்ச்சியால இரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கம் வந்திருக்கு அவ்வளவுதான், நல்லா ஓய்வு எடுத்தாலே போதும் உடம்பு சரியாயிடும், வேளா வேளைக்கு சத்தான ஆகாரமும் நான் கொடுக்கற மருந்துகளையும் கொடுத்தாலே சரியாயிடும்” என சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.
அவரை பார்த்தபடி வந்த அகத்தியனோ தன் தந்தையிடம்
”அப்பா கவலைப்படாதீங்க, தாத்தாவுக்கு ஒண்ணும் ஆகாது” என ஆறுதல்படுத்த பொன்முடியோ மகனை ஏதோ விரோதியை பார்ப்பது போல
”ஒண்ணும் ஆகாதா, ஏன் ஏதாவது ஆகனும்னு ஆசைப்படறியா இல்ல எதுவும் ஆகலையேன்னு வருத்தப்படறியா போடா அப்படி” என அகத்தியனை தள்ளிவிட அவனுக்கு பயங்கர அதிர்ச்சி. தன் தந்தையா தன்னை இவ்வாறு வெறுத்து ஒதுக்குவது என நினைத்தவன் கோபம் கொள்ளாமல் அமைதியுடன் பேசினான்
”அப்பா உங்களோட ஆதங்கம் எனக்குப் புரியது ஆனா, கொஞ்சம் என் நிலைமையையும் யோசிச்சிப் பாருங்களேன், பாவம்பா நாச்சியா அவளை ஊருக்கு நேர்ந்துவிட்டா நம்ம குடும்பத்துக்குதானே பாவம் வந்து சேரும்”
”பாவம் வந்தா கூட பரவாயில்லை அவளை ஏன்டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்த”
”புரியலைப்பா“
”முட்டாள் அவளை காப்பாத்த நீ அவளுக்கு தாலி கட்டினது எல்லாம் சரி, அதுக்காக அவளை இங்கயா கூட்டிட்டு வருவ“
”அவள் இங்க வராம வேற எங்க போவா, இதுதானே அவளோட புகுந்த வீடு”