தொடர்கதை - திருமதி அகத்தியன் - 05 - சசிரேகா
அகத்தியன் வீடு வந்த உடன் உரத்த குரலில் நாச்சியா என்றுதான் அழைத்தான், அவன் அழைத்ததும் அந்த வீட்டில் வேலை செய்த அனைத்து வேலையாட்களும் வந்து அகத்தியன் முன் நின்றார்கள். அவனோ நாச்சியாவைதான் தேடினான்
”நாச்சியா எங்க“ என அவர்களைப் பார்த்து கேட்டதும்தான் தாமதம், அனைத்து வேலையாட்களும் ஒரு சேர ஒரு புறமாக கைகாட்டினார்கள், அவனும் ஆர்வமாக திரும்பிப் பார்த்தான், அங்கு சுவரில் ஆண்டாள் நாச்சியாவின் போட்டோ இருக்கவும் திகைத்தவன்
”இவங்க யாரு“ என கேட்க பின்னால் இருந்து நாச்சியா பதில் அளித்தாள்
”ஆண்டாள் நாச்சியா உங்க பாட்டி” என்றாள் நாச்சியாவின் குரல் கேட்டதும், சட்டென திரும்பி
”அப்பாடா நீ இருக்கியா நான் பயந்தே போயிட்டேன், எங்க நீ இங்க தங்க முடியாம போயிடுவியோன்னு பயந்துட்டேன்”
”எதுக்கு இந்த வீண்பயம்”
”இல்லை என் மாமா ஆஸ்பிட்டலுக்கு வந்தாரு”
”இங்கயும் வந்தாரு”
”இங்க வந்தாரா எதுக்கு வந்தாரு”
”பெரிசா ஒண்ணும் இல்ல அவருக்கு எதிரா இருந்த அந்த ஒன்னே முக்கால் கோடி கணக்கு ஃபைலை என் கண் முன்னாடி எரிச்சிட்டு, ஒரு நாள் உன்னையும் இப்படி தீயில எரிப்பேன், உயிர் பயம் இருந்தா இந்த நிமிஷமே இந்த வீட்டை விட்டு போயிடுன்னு சொல்லிட்டு அவர் போயிட்டாரு, அவர் எண்ணப்படி நான் பயந்து இந்த வீட்டை விட்டு போயிருப்பேன்னு நினைச்சிருப்பாரு ஆனா நான் போகலை”
”அதானே ஏன் போகலை”