தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 12 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“இது தான் வீடு!” மிகப் பெரிய ஃப்ளாஷ் நியூஸை அறிவிப்பது போல சொன்னான் விஜய்!
காரில் இருந்து இறங்கி நின்றிருந்த கிருத்திகா கண்களால் வீட்டை அளந்தாள்!
அழகிய தோட்டத்திற்கு நடுவே மிக அழகாக இருந்தது அந்த பெரிய வீடு!
அவளைப் போலவே வீடை நோட்டமிட்ட மிருதுளா, “வீடு ரொம்ப அழகா இருக்கு,” என்று மனதை மறைக்காமல் புகழ்ந்தாள்!
“எல்லாமே என் மருமக பார்த்து பார்த்து செய்ததுமா...” என கிருத்திகாவை புகழ்ந்தாள் செவ்வந்தி.
மிருதுளா கேலியாக கிருத்திகாவை பார்த்தாள்!
அதற்குள், “எல்லோரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க... பிரின்சஸ் திரும்ப வந்ததை நாம செலிபரேட் செய்தாகனும்... மிருதுளா பீச் பார்க்கணும்னு ஆசைப் பட்டாங்க... ஸோ, முதல்ல பீச் போயிட்டு அப்புறம் ஏதாவது ரெஸ்டாரன்ட் போவோம்..." என்றான் விஜய்.
“எந்த ரெஸ்டாரன்ட்?” என ஷிவா கேட்க, ஒவ்வொருவராக தங்களுக்கு பிடித்த பெயர்களை சொல்ல ஆரம்பித்தார்கள்.
கிருத்திகா அந்த உரையாடலில் கலந்துக் கொள்ளாமல் வீட்டிற்குள் சென்றாள்! அவளுள் என்ன மாதிரியான உணர்வுகள் ஓடுகிறது என்று அவளாலேயே இனம் பிரிக்க முடியவில்லை! வீட்டை சுற்றி, சுற்றிப் பார்த்தாள். அந்த வீடு அவளுக்கு பரிச்சயமானது போலவும் இருந்தது, இல்லாததாகவும் இருந்தது...!
அவளுக்கு ஞாபகம் இருந்தாலும் இல்லையென்றாலும் இங்கே தான் 'அவளுடைய' மிஸ்டர் ஸ்டோன் ஸ்டாச்யூ இருக்கிறான்!
எனவே அவளை பொறுத்த வரையில் இது தான் அவளுடைய வீடு...!