கிருத்திகாவிற்கு அவளுடைய பழைய நினைவுகளை பற்றிய கவலையை விட தியாகுவின் மனதை கவருவது தான் மிக முக்கியமானதாக தோன்றியது!
🌼🌸❀✿🌷
தியாகு தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான். அவனுக்குள் பல ரகமான உணர்வுகளும், எண்ணங்களும் ஒரே நேரத்தில் படை எடுத்துக் அலை மோதிக் கொண்டிருந்தன!
“நான் அழகா இருக்கேனா?”
கிருத்திகாவின் குரல் கேட்டு வேண்டா வெறுப்பாக திரும்பியவன், நீல நிற சேலையில் வானத்து தேவதையாக மின்னியவளைப் பார்த்து திகைத்து நின்றான்.
கிருத்திகா அவளாகவே அவனின் அறைக்குள் வந்து அவனின் முன்னே வந்து நின்றாள்!
“இது எந்த சாரீன்னு ஞாபகம் இருக்குல்ல? விஜய் அண்ணா கல்யாணத்துக்கு நான் கட்டினது... அவங்க கல்யாண ரிசப்ஷன்ல கட்டின அந்த மஜெந்தா சாரீயை தேடினேன்... கிடைக்கலை... சொல்லுங்க நான் அழகா இருக்கேனா?”
கிருத்திகா மீண்டும் அதே கேள்வியை கேட்க, தியாகு பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
“கீர்த்திம்மா, ரோஸ் கேட்டீயே, இந்தா...” என்ற செவ்வந்தியின் குரல் கேட்டது.
“அத்தை கூப்பிடுறாங்க... நான் போய் ரோஸ் வாங்கிட்டு வரேன். அதுக்குள்ளே நான் அழகா இருக்கேனா இல்லையான்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திடுங்க...”
குறும்பாக சொல்லி விட்டு அவனை தாண்டி செல்ல முயன்றாள் அவள்.