“ஆமாம்! என்னோட கடி ஜோக் தாங்க முடியாம அவங்க அவர் கிட்ட கால்ல விழாத குறையா கெஞ்சி சீக்கிரம் அவளுக்கு ஒரு வேலை கண்டுப்பிடிச்சு அனுப்பி வைடான்னு சொன்னாங்கன்னா பார்த்துக்கோங்க...”
ஸ்ரீநிதி சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் கோகிலா!
“சரி, எனக்கு க்ளாஸ் இருக்கு, நான் கிளம்புறேன்...” என்றபடி எழுந்து சென்றாள் ப்ரியா.
அவர்களின் பேச்சை கேட்டிருந்தப் போதும், இப்போது முகத்தில் ஒரு சின்ன புன்னகை கூட இல்லாமல் அவள் சொல்லிவிட்டு சென்றதை யோசனையாக பார்த்தாள் கோகிலா...
“இவ ஏன் ஸ்ரீ இப்படி இருக்கா? நானும் அஞ்சு வருஷமா இவளை பார்த்துட்டே தான் இருக்கேன்... ஒரு சின்ன மாற்றம் கூட இல்லை! எப்படி ஒருத்தியால இப்படி இருக்க முடியும்?”
“உடனே ம்யூஸியத்திற்கு ஃபோன் போடு கோகிலா...”
“ஏன்?”
“இந்த மாதிரி அதிசயப் பிறவி எல்லாம் அங்கே தானே வைக்கனும்?”
“ப்ச்... விளையாடாதே ஸ்ரீ! பாவம் ப்ரியா!”
“பாவம் தான், நான் இல்லைன்னு சொல்லலையே... தன்னோட தலையில தானே மண்ணை வாரி கொட்டிக்குறவங்களை எல்லாம் நாம மாத்த முடியாது, விட்டு தள்ளு... ஆனால் எனக்கு என்னவோ கொஞ்சம் முன்னாடி அவ ஏதோ ஹீரோவை நினைச்சு தான் சிரிச்சிட்டு இருந்தான்னு தோணுது!”
“ஆ? ப்ரியாவா??”