தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 01 - சசிரேகா
முன்னுரை
தன் காதலனுக்கும் அப்பாவி பெண்ணுக்கும் நடந்த அநியாயத்திற்காக தனது வாழ்க்கை கேள்விக்குறியானாலும் பரவாயில்லை என நாயகி எடுத்த முடிவால் அக்கிரமம் செய்தவனுக்கு தண்டனை தரமுடிந்ததா அல்லது அவளே தண்டனையில் சிக்கி சூழ்நிலை கைதியாகி வாழ்க்கையை இழந்தாளா என்பதே இக்கதையின் கருவாகும்.
பாகம் 1
சென்னை
காவல் நிலையத்தில் எந்த சலனமும் இன்றி பெஞ்சில் அமர்ந்திருந்தாள் ஹரிணி. ஐடி நிறுவனத்தில் ஹெச் ஆர் ஆக பணியாற்றுகிறாள், அவளுக்கென்று துணையாக அங்கு ஒருவரும் இல்லை. அவளை பற்றித்தான் அந்த நிலையத்தில் அனைவரும் சலசலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அது அவள் காதில் விழுந்தும் அதற்காக அவள் வருந்தவில்லை. வெகு நேரம் அங்கு அமர்ந்திருந்த காரணத்தால் தண்ணீர் தாகம் எடுக்க மெதுவாக சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கிருந்த பெண் கான்ஸ்டபிளிடம்
”மேடம்” என ஈனமாக அழைத்தாள் அந்த கான்ஸ்டபிள் பெண்ணோ அவளை பார்த்து முறைக்க ஹரிணியோ
”தாகமா இருக்கு மேடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ப்ளீஸ் மேடம்” என சோர்வாக கேட்க அதற்கு அவரோ
”ஆமா நீ கெட்ட கேட்டுக்கு தண்ணி ஒண்ணுதான் குறைச்சல், புருஷனை கொன்னுட்டு எவ்ளோ தைரியமா உட்கார்ந்திருக்க, உன்னை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் தண்ணியே கொடுக்காம தவிக்க விடனும்” என சொல்ல ஹரிணியோ மென்மையாக புன்னகைத்துவிட்டு அமைதியாக, அது அவருக்கு பிடிக்கவில்லை கோபத்தில் ஹரிணியை விட்டாள் ஒரு அறை அந்த அறையில் சுருண்டு விழுந்தாள் ஹரிணி.