தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 02 - சசிரேகா
மறுநாளில் இருந்து மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டான் தருண், அவ்வளவு நாளும் வருத்தத்தில் இருந்தவன் கவலை மறந்து சிறு பிள்ளை போல மகிழ்ச்சியாக இருந்தான், இவனின் இந்த மாற்றத்தைக் கண்ட அவனது பெற்றோருக்கும் சந்தோஷம் தாளவில்லை. என்ன காரணம் என அவனிடம் கேட்டும் பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டு கம்பெனிக்குச் சென்றான். அங்கும் அவன் உற்சாகமாக இருந்தான், அவனது மகிழ்ச்சியைக் கண்டு அனைவரும் வியந்தார்கள் ஆர்வமாக ஹரிணியை காணச் சென்றான் தருண்
”மே ஐ கம் இன்” என்றான் அவனது குரலில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது அதைக்கேட்டு ஹரிணியும்
”எஸ் கம் இன்” என சொல்ல தருண் அறைக்குள் நுழைந்து அவள் முன் நின்றான், அவனைக் கண்டதும் ஆச்சர்யப்பட்டாள் ஹரிணி
”ஓ தருண் நீங்கதானா சாரி தருண் நான் யாரோன்னு நினைச்சிட்டேன்”
”ஏன் அப்படி நினைக்கனும்”
”எப்பவும் உங்க குரல் டல்லா இருக்கும் ஆனா, இப்ப உங்க குரல்ல புது எனர்ஜி தெரியுதே, அதனால யாரோன்னு நினைச்சேன்”
”இதுக்கு எல்லாம் காரணம் நீதானே”
”நானா நான் என்ன செய்தேன்”
”நேத்து டின்னர் மறந்துட்டியா”
”கமான் தருண், நான் ஏற்கனவே சொன்னதுதான் இங்க நான் ஹெச்ஆர் ஸோ இங்க எப்படி பேசனுமோ அதை மட்டும் பேசுங்க, கம்பெனிக்கு வெளியே நாம சகஜமா பேசிக்கலாம், சாரி இப்படி சொல்றேன்னு வருத்தப்படாதீங்க” என சொல்ல அவனுக்கு முகம் கருத்துவிட்டது ஆனாலும் உடனே தன்னை இயல்பாக்கிக் கொண்டான்