தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 03 - சசிரேகா
தருணின் பேச்சால் ஹரிணி மிகவும் குழம்பியிருந்தாள். அவளை நன்றாக குழப்பிவிட்ட மகிழ்ச்சியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் தருண். ஆனால் ஹரிணியால் உறங்க இயலவில்லை. ஊருக்கு கிளம்பும் நேரம் வரும் வரை அவளின் மனது போராட்டமாக இருந்தது தருணோ நன்றாக உறங்கி எழுந்து அவளைப் பார்த்தான், மிகவும் குழம்பி பயந்தபடி முகத்தை வைத்திருந்தவளைக் கண்டு மென்மையாகச் சிரித்து
”ஹரிணி” என அன்பாக அழைக்க அதில் அவள் அதிர்ந்து அவனை பேயை பார்த்தது போல பார்த்து வைக்க அதற்கு தருண்
”நான் என்ன பேயா இப்படி பயப்படற ரிலாக்ஸ், டைம் ஆயிடுச்சி, இப்ப ரெடியானாதான் பிளைட் பிடிக்க முடியும்” என சொல்ல ஹரிணி உடனே கடிகாரத்தில் நேரத்தை பார்த்து அதிர்ந்து பரபரவென ரெடியாக தொடங்க ஹரிணி தன்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே என நினைத்து சிந்தித்தபடியே தருணும் ரெடியானான்.
சிறிது நேரத்தில் ஏர்போர்ட் வந்தார்கள், செக்கிங் எல்லாம் முடிந்ததும் பிளைட்டில் ஏறினார்கள். தருண் அவனுக்கான இருக்கையில் அமர ஹரிணியும் அவளுக்கான இருக்கையில் அமர்ந்தாள், அவளின் முகத்தைப் பார்த்தான், இன்னும் அந்த முகம் தெளிவாகவில்லை, குழப்ப ரேகைகள் ஓடிக் கொண்டிருக்க அதை கண்டு சிரித்தபடியே பயணத்தை தொடர்ந்தான்.
இந்தியா வந்தும் ஹரிணிக்கு உடலில் நடுக்கம் போக வில்லை. ஏர்போர்ட் வாசலில் தருண் ஹரிணியிடம்
”வா உன்னை உன் ப்ளாட்ல ட்ராப் பண்றேன்“
”நோ” என ஒற்றை வார்த்தையில் அவனை விட்டு விலகி காரில் ஏறிப் பறந்தாள். அவளின் நடவடிக்கை அவனுக்கு புதிராக இருந்தது, அவள் தன்மீது கோபமாக இருக்கிறாளா அல்லது வெறுக்கிறாளா என தெரியாமல் தவித்தபடியே தன் வீட்டிற்குச் சென்றான். தன் பெற்றோரிடம் ஹரிணியை பற்றி கூறாமல் லண்டன் சென்று வந்த கதையை சொல்லி அளந்தான். அவர்களும் மகிழ்ந்தார்கள்.