தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 10 - சசிரேகா
அன்றைய நாள் முழுக்க தருண் காட்டிய அன்பில் திக்குமுக்காடிப் போனாள் ஹரிணி. ஆனாலும் இந்த அன்பெல்லாம் வெறும் நடிப்புதானே, இப்படி நடித்து நடித்தே நிவேதினி மற்றும் பவானியின் வாழ்க்கையை அழித்தானே, அவர்களைப் போல தானும் ஆகிவிடக் கூடாதென ஜாக்கிரதையாக அவனிடம் பழகினாள்.
”ஹரிணி உண்மையிலயே நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா ப்ச் சிலை போல செதுக்கி வைச்ச உடம்பு என் கண்ணுக்குள்ளயே இப்பவும் இருக்குன்னா பாரு” என சொல்ல அவளோ வெட்கச் சிரிப்பு சிரித்தாள். அந்த சிரிப்பு உண்மை என நம்பி
”உனக்கு என்கிட்டயிருந்து ஏதாவது வேணுமா கேளு தரேன்” என சொல்ல அவளோ
”உங்க அன்பு மட்டும் மாறாம இப்பவும் போல எப்பவும் இருக்கனும் தருண், நான் சாகறவரைக்கும் உங்க அன்புல கரைஞ்சியிருக்கனும், உங்களைப் போல அன்புலயும் என்னைப் போல அழகுலயும் குழந்தைகளை பெத்துக்கனும், ஆண் ஒண்ணு பெண் ஒண்ணு போதும், இரண்டு குழந்தைகளையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கனும் தருண்” என அவள் சொல்ல சொல்ல தருணின் முகம் கருத்துவிட்டது
”குழந்தைகளா இப்பவா”
”ஏன் குழந்தைகளாலதானே குடும்ப வாழ்க்கையை நம்ம உறவை பூர்த்தி செய்ய முடியும், அழகான குழந்தைகள் இந்த வீட்ல இருந்தா எவ்ளோ சந்தோஷமா இருக்கும்” என சொல்ல தருணுக்கு எரிச்சலாக இருந்தது
”இப்பதானே நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு அதுக்குள்ள என்ன அவசரம், குழந்தைகள்தானே பார்த்துக்கலாம் ஒரு நாலஞ்சு வருஷம் கழிச்சி ப்ளான் பண்ணிக்கலாம்”
”முடியாது தருண் எனக்கு இப்பவே வேணும் ஆண்குழந்தை பிறந்தா இளங்கோன்னும் பெண் குழந்தை பிறந்தா பவானின்னும் பெயர் வைச்சி வளர்க்கனும், அப்பதான் இளங்கோ பவானியோட ஆத்மா சாந்தியாகும்”